மமதா- உங்க ஆட்டம் முடிஞ்சிருச்சி-இனி வளர்ச்சிக்கான பணி ஆரம்பம்.. மே.வங்கத்தில் மோடி பொளேர் பிரசாரம்
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டது; இனி வளர்ச்சிககான பணிகள் தொடங்கப் போகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட மத்திய அமைச்சர்கள் மமதா பானர்ஜிக்கு எதிராக தீவிர பிரசாரம் செய்கின்றனர்.
வாய்ப்பு கொடுங்க..
காரக்பூரில் இன்று நடைபெற்ற தேர்தல்ல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: காங்கிரஸ், திரிணாமுல் , இடதுசாரிகளுக்கு மேற்கு வங்கம் வாய்ப்பு கொடுத்திருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு பாஜகவுக்கு வாய்ப்பு கொடுத்தால் உண்மையான மாற்றத்தை உங்களால் பார்க்க முடியும்.
உங்களுக்காக தியாகம் செய்வோம்
காங்கிரஸும் இடதுசாரிகளும் திரிணாமுல் காங்கிரஸும் மேற்கு வங்க மாநிலத்தை சீர்குலைத்துப் போட்டிருக்கின்றன. உங்கள் கனவுகளை தவிடுபொடியாக்கிவிட்டனர். 70 ஆண்டுகால பேரவலத்தை பாஜகவால் 5 ஆண்டுகளிலேயே சீரமைத்துவிட முடியும். உங்களுக்காக நாங்கள் தியாகம் செய்ய காத்திருக்கிறோம்.
பாஜக- மேற்கு வங்கம்
சியாமா பிரசாத் முகர்ஜிதான் ஜனசங்கத்தை உருவாக்கினார். மேற்கு வங்கத்தில் இருந்து உருவான ஒரே கட்சி அது பாரதிய ஜனதா கட்சிதான். இந்த மக்கள் மமதாவுக்கு 10 ஆண்டுகாலம் வாய்ப்பு கொடுத்தனர். ஆனால் வன்முறை, மோசமான நிர்வாகம் என மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் மமதா பானர்ஜி.
மமதாவுக்கு அக்கறை இல்லை
வாட்ஸ் அப் உள்ளிட்டவை நேற்று இரவு 40 நிமிடங்கள் முடங்கிப் போனது. மேற்கு வங்கமோ 50 ஆண்டுகாலம் பின்தங்கிக் கிடக்கிறது. மமதா பானர்ஜி... உங்க ஆட்டம் முடிந்துவிட்டது. இனி இங்கே வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்வோம். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை செயல்படுத்த மமதா பானர்ஜி மறுத்துவிட்டார். அவருக்கு இந்த தேசத்தின் எதிர்கால இளைஞர்கள் மீது அக்கறை இல்லை.
மாஃபியாக்கள் உருவாக்கம்
மோடிக்கு நல்ல பெயர் வந்துவிடுமே என்கிற அச்சத்தால் மத்திய அரசின் எந்த ஒரு திட்டத்தையும் மமதா பானர்ஜி செயல்படுத்தவே இல்லை. இதனால் இங்கே பல தொழிற்சாலைகள் செத்துகிடக்கின்றன. ஆனால் மாஃபியாக்கள் உருவாவது மட்டும் நிற்கவில்லை. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.