கொரோனாவை விடுங்க.. பாஜகவே மிகப் பெரிய தொற்றுநோய்தான்.. மம்தா கடும் தாக்கு
கொல்கத்தா: இந்திய நாட்டுக்கே பாஜகதான் மிகப் பெரிய தொற்று நோய். அது நாட்டை அழிக்காமல் விடாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவை விட ஹத்ராஸ் விவகாரம் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயது இளம் பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினரின் கருத்துகளை கேட்க பத்திரிகையாளர்கள் ஹத்ராஸ் பகுதிக்குள் செல்லாத வகையில் தடுத்து நிறுத்தப்பட்டு 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது.
.@MamataOfficial, staunchly believes in equality. She never differentiates between Dalits, minorities or other communities. Under her leadership, today we hit the streets to protest against the uncouth @BJP4India leaders & demand justice for our Dalit women! #BJPHataoBetiBachao pic.twitter.com/QJdoqdmJL4
— All India Trinamool Congress (@AITCofficial) October 3, 2020
உத்தரப்பிரதேசம்
இந்த நிலையில் ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேரணி சென்றார். அப்போது அவர் கூறுகையில் நான் தற்போது உத்தரப்பிரதேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். நான் எனது சார்பில் ஒரு பிரதிநிதியை அனுப்பினேன். அவர் அங்கு தடுத்து நிறுத்தப்பட்டார்.
பெண் எம்பிக்கள் மீது தாக்குதல்
எங்கள் கட்சியின் பெண் எம்பிக்கள் தாக்கப்பட்டனர். பத்திரிகையாளர்களும் அவர்கள் சார்ந்த நிறுவனங்களுக்கும் உண்மையை வெளியே கொண்டு வரக் கூடாது என மிரட்டல் விடுக்கப்படுவதாக ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன. நாம் போராடுவோம். பாஜகவுக்கு ஒன்றை கூறிக் கொள்கிறேன்.
துர்கா பூஜை
நாங்கள் உங்கள் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு அஞ்ச மாட்டோம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் செல்போன்களும் போலீஸாரால் பறிக்கப்பட்டுள்ளன. பாஜகவே மிகப் பெரிய தொற்றுதான். அது தற்போது நாட்டை அழித்துவிட்டது. நாம் சமூக விலகலுடன் போராடுவோம். யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேசத்தில் ஏன் துர்கா பூஜைக்கு அனுமதி கொடுக்கவில்லை?
வெளிச்சம்
தலித் சமூகத்தை சேர்ந்த சகோதரர்கள், சகோதரிகள் இருட்டில் தள்ளப்படுகிறார்கள். நாம் அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். அதற்காகத்தான் நம் கையில் டார்ச் லைட் இருக்கிறது. நீதி எங்கே, நிறைய பேர் என்கவுன்ட்டர் செய்யப்படுகிறார்கள். டெல்லி கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைத்ததா என மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.