அதெப்படி வதேரா காரை முந்தலாம்? டெல்லி தொழிலதிபருக்கு அபராதம்!
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா சென்ற காரை அபாயகரமான முறையில் காரில் முந்தியதாக டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
டெல்லியின் ஓக்லா பகுதியிலிருந்து ராபர்ட் வதேரா அமர் காலனி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது பஷ்சிம் விஹார் பகுதியைச் சேர்ந்த ரஸ்தோகி என்பவர் லஜ்பத் நகரில் இருந்து மோதி மில்ஸுக்கு சென்று கொண்டிருந்தார்.
அந்த வழியில் சென்ற வதேராவின் காரை அபாயகரமாக முந்த முயன்றதாக ரஸ்தோகியை வதேராவின் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தி போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். எதற்காக ரஸ்தோகி வதேராவை முந்த முயன்றார் என பல மணி நேரம் போலீசார் அவரிடம் கிடுக்குப் பிடிவிசாரணை நடத்தினர்.
ஆனால் விசாரணையின் முடிவில் எந்த உள்நோக்கமும் இல்லாமலேயே முந்த முயன்றதாக ரஸ்தோகி கூறினார். இதனால் அவருக்கு அபராதம் மட்டும் விதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.