வேற லெவல் சம்பவம்.. காதல் மனைவிக்கு தாஜ் மஹாலையே.. வீடாகக் கட்டித் தந்த கணவர்.. வைரல் போட்டோ
இந்தூர்: மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அப்படியே தாஜ் மஹாலைப் போலவே இருக்கும் வீடு ஒன்றைக் கட்டி பரிசாக அளித்துள்ளார்.
அனைவரும் தங்கள் காதலி அல்லது மனைவிக்குப் பிடித்த பொருட்களைப் பரிசாக அளிப்பது சாதாரண ஒரு நிகழ்வுதான். அதில் காதல் சின்னமான தாஜ் மஹால் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.
ஆந்திராவுக்கு 3 தலைநகர் கிடையாது.. ஹைகோர்ட்டில் அந்தர் பல்டி அடித்தது ஜெகன் மோகன் ரெட்டி அரசு!
ஆனால், மத்தியப் பிரதேசத்தில் ஒருவர் அனைவரையும் தூக்கிச் சாப்பிடும் வகையில் தாஜ் மஹாலை போலவே வீடு ஒன்றைத் தனது காதல் மனைவிக்குக் கட்டித் தந்துள்ளார்.
சூப்பர் பரிசு
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்கு ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ் மஹாலைப் போலவே அச்சு பிசகாமல் வீடு ஒன்றைக் கட்டி தனது காதல் மனைவிக்குப் பரிசளித்தார். ஷாஜஹான் தனது மனைவி மும்தாஜ் மீதான காதலின் அடையாளமாக தாஜ் மஹாலை உருவாக்கியது போல், மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூரைச் சேர்ந்த இவர் தனது மனைவிக்குப் பரிசு அளித்துள்ளார்.
காதல் சின்னம்
இது தொடர்பாக இந்தியா டுடே வெளியிட்ட செய்தியில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆனந்த் சோக்சே என்பவருக்கு தாஜ்மஹாலின் அழகின் மீது எப்போதும் பிரமிப்பு தான். தனது ஊரிலும் யாராவது தாஜ்மஹாலைப் போலவே ஒரு கட்டிடத்தைக் கட்ட வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு எப்போதும் இருந்தது. இது குறித்துப் பல மாதங்களாகத் தீவிரமாகச் சிந்தித்த அவர், கடைசியில் தானே தாஜ் மஹாலை போலவே ஒரு வீட்டைக் கட்டி தனது காதல் மனைவிக்குப் பரிசாக அளிக்க முடிவு செய்தார்.
3 ஆண்டுகள்
இதற்குத் தேவையான கட்டுமானப் பணிகளை மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி ஆனந்த் சோக்சே, சமீபத்தில் தான் பணிகளை முற்றிலுமாக முடித்து தனது காதல் மனைவிக்கு தாஜ் மஹாலை போலவே இருக்கும் அழகிய வீட்டைப் பரிசாக அளித்தார். 4 படுக்கை அறைகளைக் கொண்ட இந்த வீடு அப்படியே அச்சு பிசகாமல் தாஜ்மஹாலை போலவே உள்ளது. அப்படியே தாஜ் மஹாலை போல இந்த வீட்டைக் கட்ட கடும் சிரமத்தை எதிர்கொண்டதாக இந்த அழகிய வீட்டைக் கட்டிய பொறியாளர் தெரிவித்துள்ளார்.
அச்சு பிசகாமல் தாஜ் மஹால்
அப்படியே தாஜ் மஹாலை போல இந்த வீட்டைக் கட்ட அவர் பெங்கால் மற்றும் இந்தூரில் உள்ள கலைஞர்களிடமும் உதவிகளைக் கேட்டுள்ளார். 29 அடி உயரம் கொண்ட இந்த வீடு அப்படியே தாஜ்மஹாலின் கோபுரங்களைப் போல உள்ளது. இந்த வீட்டில் உள்ள தரையில் ராஜஸ்தானின் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இருளிலும் ஜொலிக்கும்
இந்த வீடானது ஒரு பெரிய ஹால், கீழ் தளத்தில் இரண்டு படுக்கையறைகள், மேற்தளத்தில் இரண்டு படுக்கையறைகள், ஒரு நூலகம் மற்றும் ஒரு தியான அறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இருளிலும் தாஜ் மஹாலை போலவே ஜொலிக்கும் வகையிலான லைட்டிங் இந்த வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.