என்ன கொடுமை இது!: ம.பி.யில் பூண்டு திருடியதற்காக ஒருவர் அடித்துக் கொலை
போபால்: மத்திய பிரதேசத்தில் பூண்டு திருடி கையும் களவுமாக சிக்கியவரை 6 பேர் கொண்ட கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் மாட்டத்தில் உள்ள குல்வா கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய் பிரிஜ்லால்(33). சஞ்சய் அதே கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரின் வீட்டிற்கு சென்று பூண்டை திருடியுள்ளார்.
பூண்டை திருடுகையில் அவர் கையும், களவுமாக பிடிபட்டார். இதையடுத்து ரமேஷ், முகேஷ், மகேஷ், சுபாஷ், தஷ்ரத், பால்முகுந்த் ஆகிய 6 பேர் சேர்ந்து சஞ்சயை அடித்து நொறுக்கியுள்ளனர்.
அதன் பிறகு அவர்கள் சஞ்சயை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் அடித்ததில் படுகாயம் அடைந்த சஞ்சயை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஒருவரை மட்டும் கைது செய்துள்ளனர், மற்ற 5 பேரை தேடி வருகிறார்கள்.