பெங்களூரு: மனைவியின் நிர்வாணப்படத்தை போஸ்டர் போட்டு ஒட்டிய நபர் கைது
பெங்களூரு: தன்னை அவமானப்படுத்திய மனைவியின் நிர்வாணப் புகைப்படத்தை பெங்களூரு நகர் முழுவதும் ஒட்டிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பெங்களூரு நகரின் முக்கிய இடங்களில் எல்லாம் ஒரு நடுத்தர வயது பெண்ணின் நிர்வாண புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தாலும் ஒரு சிலர் இந்த புகைப்படத்தைத் தேடி தேடி கிழித்து கையோடு எரித்துக் கொண்டிருந்தனர். பொதுமக்கள் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்திய தனது முதல் மனைவியை பழிவாங்குவதற்காகவே இப்படி நிர்வாணப் புகைப்படத்தை நகரெங்கும் ஒட்டியுள்ளார் வெங்கட்டப்பா, 65 என்ற நபர்.
பெங்களூரில் இருந்து 82 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கோலார் தங்கவயல் அருகே பங்காருபேட் என்ற பகுதியில் வசித்து வருபவர் வெங்கடப்பா,65 .இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கும் இவருக்கும் அடிக்கடி குடும்பத்தில் சண்டை வருவது உண்டாம்.
ஒரு நாள் இவரது மூத்த மனைவி தனது மகளுடன் வீட்டை விட்டு வெளியேறி பொதுமக்கள் முன்னிலையில் வெங்கடப்பாவை தகாத வார்த்தைகளால் திட்டினாராம். இரண்டாவது மனைவியின் தொடர்பை விலக்கி கொள்ளாவிடில் இனிமேல் வீட்டிற்கு வர மாட்டோம் என மிரட்டினாராம்.
இரண்டாவது மனைவியின் தொடர்பை துண்டித்தக்கொள்ள வெங்கடப்பா மறுத்துள்ள நிலையில்,முதல் மனைவிக்கும் வெங்கடப்பாவுக்கும் சண்டை தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் தன்னை பொதுமக்கள் முன்னிலையில் அவமானப்படுத்திய மனைவியை பழி வாங்க நினைத்த வெங்கடப்பா,தன் மனைவியுடன் சந்தோசமாக இருந்த நேரத்தில் எடுத்த மனைவியின் நிர்வாண புகைப்படத்தை பெங்களூர் நகர் முழுவதும் போஸ்டர் போட்டி ஒட்டியுள்ளார்.
கர்நாடகாவின் முக்கிய நகரங்களில் ஒட்டியிருந்த நிர்வாணப் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்த அந்தப் பெண்ணின் உறவினர்கள், இது குறித்து காவல் துறையில் புகார் செய்தனர். இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து காவல்துறை, வெங்கடப்பாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கட்டிய கணவனாகவே இருந்தாலும் ஒரு அளவிற்கு மேல் அந்தரங்கமாக புகைப்படம் எடுக்க விடக்கூடாது என்று பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் போலீசார்.