ஹரியானா முதல்வர் போல் நடித்து... ‘ஹோட்டல்’ வேலைக்கு முயற்சித்த இளைஞர் கைது!
குர்கான்: ஹரியானா முதல்வர் மனோகர் லால் கத்தார் போல் நடித்து, ஹோட்டலில் வேலை பெற முயற்சித்த இளைஞரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி அருகே உள்ள ரோஹினி பகுதியைச் சேர்ந்தவர் அமித் குமார் என்ற 29 வயது இளைஞர். ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பு முடித்த இவர் சமீபத்தில் க்ரவுன் பிளாசா கிச்சனில் வேலைக்காக பதிவு செய்திருந்தார். அதில் தனக்கு ஹரியானா மாநில முதல்வரின் சிபாரிசு இருப்பதாக அமித்குமார் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு க்ரவுன் பிளாசாவுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர், தான் ஹரியானா முதல்வர் மனோக்கர் லால் கத்தார் என அறிமுகம் செய்து கொண்டு, தனது சிபாரிசில் வந்துள்ள அமித் குமார் என்ற இளைஞரைப் பணியில் சேர்த்துக் கொள்ளும்படி வலியுறுத்தியுள்ளார்.
ஹரியானா முதல்வரே தங்களுக்கு போன் செய்து வேலைக்காக சிபாரிசு செய்ததால் க்ரவுன் பிளாசா ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ட்ரூகாலர் மூலம் அழைப்பு வந்த எண்ணை சோதித்த போது, அது முதல்வர் எண் இல்லை என்பது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து இது குறித்து போலீசில் அவர்கள் புகார் அளித்தனர். போலீசாரின் விசாரணையில் அமித் குமாரே தொலைபேசியில் பேசியது அம்பலமானது. அதனைத் தொடர்ந்து அவரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.