ஸ்கூட்டி வாங்கியதால் மனைவி மீது ஆசிட் ஊற்றி தானும் குடித்த கணவர்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் மனைவி ஸ்கூட்டி வாங்கியதால் ஆத்திரம் அடைந்த கணவர் அவர் மீது ஆசிடை ஊற்றிவிட்டு தானும் அதை குடித்துவிட்டார்.
உத்தர பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள மனேரா ரனியாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹவால்தார் சுக்லா(40). அவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். அவரது மனைவி தீப்மாலா(35) பள்ளி ஒன்றில் பணிபுரிகிறார்.
தீப்மாலா ஒரு ஸ்கூட்டி வாங்கியுள்ளார். இது ஹவால்தாருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் மனைவி மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காலை தீப்மாலா தன் கணவருக்கு டீ கொடுத்துள்ளார். அப்போது ஹவால்தார் அந்த அறையில் தான் வைத்திருந்த ஒரு பாட்டில் ஆசிடை எடுத்து மனைவி மீது ஊற்றினார்.
பின்னர் மற்றொரு பாட்டில் ஆசிடை எடுத்து ஹவால்தார் குடித்துவிட்டார். இதையடுத்து அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து அவர்களை அருகில் உள்ள மருத்துவமைனையில் சேர்த்தனர். அவர்களின் நிலைமை மோசமாக இருந்ததால் அவர்கள் பஹ்ரைச் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தீப்மாலாவுக்கு 60 சதவீத காயம் ஏற்பட்டுள்ளது. அவரது முகம், தலை, உடலில் பல பகுதிகள் வெந்துவிட்டது. ஹவால்தாரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.