மனிதம்!! உயிருக்கு போராடிய குரங்கு.. நொடியும் தாமதிக்காமல் உயிரை காக்க இளைஞர் செய்த செயல்.. வீடியோ
கள்ளக்குறிச்சி: அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் குரங்கின் உயிரைக் காக்க இளைஞர் உதவி செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலகி வருகிறது.
Recommended Video
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள செம்பாகுறிச்சி வனப்பகுதியில் அதிகளவில் குரங்குகள் உள்ளன.
இவை தேசிய நெடுஞ்சாலைக்கு அருகிலேயே வசித்து வருகின்றன. இதனால் உணவு தேடி தேசிய நெடுஞ்சாலைக்கு இந்த குரங்குகள் வருவதால் அடிக்கடி விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

உயிருக்கு போராடிய குரங்கு
அப்படி தான் இன்று காலை குரங்கு ஒன்று நெடுஞ்சாலைக்கு வந்துள்ளது. அப்போது அங்கு அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று மோதியதில், அந்தக் குரங்கு பலத்த காயமடைந்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது, இதை அவ்வழியாக வந்த வாகன ஓட்டி பிரபு என்பவர் பார்த்துள்ளார். உடனடியாக குரங்கைத் தூக்கிச் சென்று அருகில் கைபம்பில் இருந்து தண்ணீர் கொடுத்து முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார்.

பாராட்டு
அதன் பின்னரே அந்தக் குரங்கிற்கு மயக்கத்தில் இருந்து தெளிந்துள்ளது. பிரபு அந்த குரங்கிற்கு முதலுதவி செய்யும் வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலகி வருகிறது. குரங்கைக் காப்பாற்றிய பிரபுவிற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. இதுபோல் தொடர்ந்து குரங்குகள் விபத்து ஏற்படாமல் இருக்க வனப்பகுதியில் குரங்குகள் காப்பகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மனிதம்
முன்னதாக பெரம்பலூர் மாவட்டம், ஒதியம் கிராமத்தில் தெரு நாய்கள் கடித்ததில் படுகாயமடைந்து மயக்கமடைந்த குரங்கை அப்பகுதியில் சென்ற நபர் முதலுதவி அளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி இருந்தது. இதற்காக முதல்வர் ஸ்டாலின் அவரை நேரில் அழைத்துப் பாராட்டியிருந்தார். விலங்குகளின் உயிர்களும் மனிதர்களின் உயிர்களுக்குத் துளியும் குறைந்தது இல்லை என்பதை உணர்த்தும் வகையில் இதுபோன்ற செயல்கள் ஆங்காங்கே நடந்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் இதுபோன்ற நிகழ்வுகள் அல்லது விபத்துகள் ஏன் தொடர்கதையாகி வருகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

என்ன காரணம்
நகரமயமாக்கல் அதிகரிக்க அதிகரிக்க இதுபோன்ற மனித விலங்கு மோதல் அதிகரித்துள்ளது. குரங்குள் மட்டுமின்றி பல்வேறு விலங்குகளும் மனிதர்களின் நடவடிக்கைகளால் உயிரிழக்கும் சூழல் ஏற்படுகிறது. சமீபத்தில் தான் கோவையில் இரவு நேரத்தில் ரயில் மோதியதில் கருவுற்று இருந்த பெண் யானை உட்பட 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications