வீட்டில் வேலைபார்த்த 3 சிறுமிகளை 4 மாதங்களாக பலாத்காரம் செய்துவந்த மாமன், மருமகன் கைது!

பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிந்த மூன்று சிறுமிகளை என்.ஜி.ஓ அமைப்பை சேர்ந்தவர்கள் மீட்டு, குவந்தைகள் நல கமிட்டியிடம் ஒப்படைத்தனர்.
மூன்று சிறுமிகளுக்கும், முறையே 13, 14 மற்றும் 15 வயதாகும். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, ஆஸ்டின் டவுன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தாங்கள் வேலை பார்த்ததாகவும், அங்கு பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதால் தப்பியோடி வந்து தங்களது சொந்த ஊரான பெல்லாரிக்கு செல்ல ரயில் நிலையம் வந்ததாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து சிறுமிகள் கொடுத்த முகவரிக்கு சென்ற போலீசார் அவர்கள் கூறியபடி அந்த வீட்டில்தான் மூவரும் வேலை பார்த்ததை உறுதி செய்தனர். இதையடுத்து வீட்டின் உரிமையாளர் அஜிசுல்லா கான் (50) மற்றும் அவரது மருமகன் சாதிக் அகமது (30) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அஜிசுல்லா கான் மனைவி பெல்லாரியை சேர்ந்தவர். நான்கு மாதங்கள் முன்பு, பெல்லாரிக்கு சென்றபோது, இந்த சிறுமிகளை வீட்டு வேலைக்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில்தான் மூன்று சிறுமிகளையும், அஜிசுல்லா கான் மற்றும் மருமகன் சாதிக் அகமது ஆகியோர் தொடர்ந்து பலாத்காரத்திற்கு உட்படுத்தி வந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications