மோடி, கெஜ்ரிவால் வீடுகளில் குண்டு வைத்துள்ளேன்: போன் மூலம் மிரட்டல் விடுத்த நபர்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீடுகளை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக ஒருவர் தேசிய புலனாய்வு அமைப்புக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்தார்.
டெல்லியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு அலுவலகத்திற்கு சனிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு போன் அழைப்பு ஒன்று வந்தது. எடுத்து பேசியபோது மறுமுனையில் பேசியவர் பிரதமர் மோடி மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரின் வீடுகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசாரும் மோடி மற்றும் கெஜ்ரிவாலின் வீடுகளுக்கு விரைந்து சென்றனர். அங்கு தீவிர சோதனை நடத்தியதில் குண்டு எதுவும் இல்லை என்பதும், அந்த நபர் பொய் சொல்லியதும் தெரிய வந்தது.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை அவரது செல்போன் எண்ணை வைத்து கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக இந்த வார துவக்கத்தில் ஒருவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து குடியரசுத் தலைவர் மாளிகையில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
போலீசார் அவரது எண்ணை வைத்து அவரை கண்டுபிடித்ததில் அவர் போதைப் பொருளுக்கு அடிமை என்பதும், போதையில் அவ்வாறு போன் செய்ததும் தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications