ரூ. 5.5 கோடி பழைய ரூபாய் நோட்டுக்களுடன் தனி விமானத்தில் தன்னந்தனியாக பறந்த கோடீஸ்வரர்!
ரூ. 5.5 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்களுடன் தனி விமானத்தில் தனியாக வந்த கோடீஸ்வரரை போலீஸார் பிடித்துள்ளனர்.
திம்மாபூர்: பீகாரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர், ரூ.5.5 கோடி பழைய ரூபாய் நோட்டுக்களுடன் தனி விமானத்தை அமர்த்தி தன்னந்தனியாக வந்தபோது நாகாலாந்தில் வைத்து அவரை அதிகாரிகள் மடக்கினர்.
இந்த நபரின் பெயர் ஏ. சிங் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் ஹரியானா மாநிலம் சிர்சாவிலிருந்து ஒரு வாடகை விமானத்தில் தனியாக வந்துள்ளார். நாகாலாந்து மாநிலம் திம்மாபூர் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது.
ஒரு விமானத்தில் ஒரே ஒரு நபர் மட்டும் வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரும், சுங்கத்துறை அதிகாரிகளும் சிங்கைப் பிடித்து விசாரித்தனர். பின்னர் விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதில் ரூ. 5.5 கோடி மதிப்புள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் கட்டுக் கட்டாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இந்தப் பணம் குறித்தும், தனியாக இதை எடுத்து வந்தது ஏன் என்பது குறித்து அதிகாரிகள் சிங்கிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது கறுப்புப் பணமாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.