பெண் பிள்ளை என்பதால் பிடிக்கவில்லையாம்! 10 வயது மகளை உயிரோடு மண்ணுக்குள் புதைத்த கொடூரத் தந்தை!
அகர்தலா: வட கிழக்கு இந்தியாவில் உள்ள திரிபுரா மாநிலத்தில் வீட்டின் கொல்லைப்புறத்தில் 10 வயது மகளை உயிரோடு புதைக்க முயற்சி செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.
இந்திய-வங்கதேச எல்லைப்பகுதியில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் அபுல் ஹூசைன். இவர் மனைவி வெளியே சென்ற நேரம் பார்த்து, வீட்டின் பின் புறத்தில் ஒரு குழியைத்தோண்டி தனது 10 வயது மகளின் கை மற்றும் வாயைக்கட்டி அந்த குழிக்குள் இறக்கி மண்ணைப்போட்டு மூடியுள்ளார். சத்தம் எழுப்ப முடியாத சிறுமி பயத்தில் மயக்கமடைந்திருக்கிறாள்.

சிறுமியின் மார்பு வரை மண்ணைப்போட்டு கொண்டிருந்த போது வெளியே சென்றிருந்த மனைவி வந்து விடவே அவசர அவசரமாக ஒரு மூங்கில் டிரம்மால் சிறுமியின் தலையை மூடி விட்டு ஒன்றும் தெரியாததை போல வீட்டுக்குள் சென்று அமர்ந்துள்ளார்.
வீடு திரும்பிய மனைவி மகள் எங்கே என்று கேட்டுள்ளார். அபுல் தெரியாது என்றதும் சந்தேகமடைந்து சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அந்த சிறுமியை கண்டுபிடித்தனர். பின்னர் அபுலை அடித்து உதைத்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்று விசாரித்த போது, அந்த நபருக்கு பெண் குழந்தை பிடிக்காததால், அவளை உயிரோடு புதைத்துவிட முயன்றது தெரிய வந்துள்ளது.
காவல்துறையினரிடம், "எனக்கு என் மகளை பிடிக்கவில்லை, அதனால்தான் இப்படி செய்தேன்" என்று கூறியிருக்கிறான் இந்த கொடூர தந்தை. இச்சம்பவம் இந்திய எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications