மனிதருள் மாணிக்கம் மண்டேலாவும்.. இந்தியாவும்
டெல்லி: மகாத்மா காந்தியின் பாதையில் அகிம்சை ஆயுதத்தைக் கையில் ஏந்தி தென் ஆப்பிரிக்காவை வெள்ளையர் அடிமைத்தனத்திலிருந்து மீட்ட மாபெரும் போராளி மண்டேலா. அவருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்புகள் ஆழமானவை, ஆத்மார்த்தமானவை.
95 வயதில் மரணமடைந்துள்ள மண்டேலா பாரதரத்னா விருது பெற்ற 2வது இந்தியர் அல்லாத தலைவர் என்ற பெருமைக்குரியவர்.
காந்திய வழியில் தன் மக்களுக்காகப் போராடியவர். வெள்ளையர்களின் அடிமைத்தளையிலிருந்து தனது மக்களை மீட்க தனது வாழ்க்கையின் பாதிக் காலத்தை சிறையில் கழித்தவர் மண்டேலா. இந்தியாவுக்கும், மண்டேலாவுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த ஒரு பார்வை...

முதலில் வந்தது இந்தியாவுக்கு
25 வருட காலம் சிறையில் அடிமைப்பட்டுக் கிடந்தார் மண்டேலா. 1990ல் அவர் விடுதலையானார். அதன் பின்னர் அவர் வந்த முதல் நாடு இந்தியாதான். இந்தியாவுக்குத்தான் முதலில் செல்வேன் என்று கூறி இந்தியா வந்தார் மண்டேலா.

எம்.பியாக வந்தார்
இந்தியாவுக்கு அவர் வந்தபோது ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் எம்.பியாக அவர் இருந்தார்.

காந்தி பிறந்த மண்ணுக்கு 95ல் வருகை
அதேபோல மீண்டும் 1995ம் ஆண்டு இந்தியா வந்தார் மண்டேலா. அப்போது அவர் காந்தி பிறந்த பூமியான குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு வருகை தந்தார்.

காந்திக்குப் புகழாரம் சூட்டிய மண்டேலா
அகமதாபாத் வந்திருந்தபோது மண்டேலா பேசுகையில், மகாத்மா காந்தி வகுத்து வைத்துள்ள எளிமை, தார்மீக உறுதி, ஏழைகளுக்கு இரங்கும் குணம் உள்ளிட்ட எதையுமே என்னால் முழுமையாக எட்ட முடியவில்லை. பலவீனங்களே இல்லாத மாமனிதர் காந்தியடிகள். ஆனால் நானோ, பலவீனங்கள் நிரம்பியவன் என்று வெளிப்படையாக பேசினார்.

காந்தி அமைதி விருது
2001ம் ஆண்டு மண்டேலாவுக்கு சர்வதேச காந்தி அமைதிப் பரிசு வழங்கப்பட்டது. இந்திய அரசு இந்த விருதினை அளித்துக் கெளரவித்தது.

மண்டேலாவை சந்தித்த கலாம்
2004ம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஜோஹன்னஸ்பர்க் சென்றிருந்தபோது மண்டேலாவைச் சந்தித்து கலந்துரையாடி மகிழ்ந்தார். மேலும் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த சிறைக்கும் போய் அவர் அடைபட்டிருந்த சிறை அறையைப் பார்த்து நெகிழ்ந்தார்.

சச்சினுடன் சந்திப்பு
1997ம் ஆண்டு கேப்டவுனில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆட வந்திருந்த இந்திய கிரிக்கெட் அணியினரை மண்டேலா சந்தித்துப் பேசினார். சச்சின் டெண்டுல்கரும் அப்போது உடன் இருந்தார்.

காந்தியைப் பார்த்து வளர்ந்தவர்
1893ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் தான் எதிர்கொண்ட இனவெறியை பார்த்து அதிர்ந்தே மகாத்மா காந்தியடிகள் இனவெறிக்கு எதிராகவும், வெள்ளையர்களுக்கு எதிராகவும் போராட்டக் களத்தில் குதித்தார். அதுதான் மண்டேலாவுக்கும் உத்வேகம் அளித்து போராட்டத்திற்கு இழுத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்கர்களுக்காகப் போராடிய இந்தியர்கள்
தென் ஆப்பிரிக்காவில் நிலவி வந்த இனவெறிக் கொடுமைக்கு எதிராக அங்கு வசித்து வந்த எத்தனையோ இந்திய வம்சவாளியினர் போராடி உயிர் நீத்தனர் என்பது வரலாறு.












Click it and Unblock the Notifications