தேர்தல் நெருங்கும் நேரத்தில்.. தமிழ் கருத்தரங்கம் நடத்திய மணிப்பூர் பாஜக அரசு! பின்னணி இதுதானா?
இம்பால்: மணிப்பூர் சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் தமிழ்க் கருத்தரங்கை நடத்தியிருக்கிறது அம்மாநில ஆளும் பாஜக அரசு.
2017-ம் ஆண்டு மணிப்பூர் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 28 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பாஜகவுக்கு 21 எம்.எல்.ஏக்கள் கிடைத்தனர். மணிப்பூரில் ஆட்சி அமைக்க 31 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தொங்கு சட்டசபை உருவானது.
ஆனால் மணிப்பூர் மாநில கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது. மணிப்பூர் மாநில பாஜக முதல்வராக பைரோன்சிங் செகாவத் பதவியேற்றார். கடந்த 4 ஆண்டுகளில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை அடுத்தடுத்து கொத்து கொத்தாக பாஜக வளைத்துப் போட்டது. பாஜகவின் இந்த சித்துவிளையாட்டு ஆட்சியின் இறுதி காலத்தில் பூமராங் போல திரும்பியது.

மணிப்பூர் களநிலவரம்
மாநில கட்சிகள், பாஜக அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்றன. பாஜக எம்.எல்.ஏக்களோ காங்கிரஸுக்கு தாவினர். இதனால் பாஜக அரசு பெரும்பான்மையை இழக்க, சில மாதங்களுக்கு முன்னர் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ். மணிப்பூர் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளில் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என்றே கூறி வருகின்றன. ஆனால் அங்கிருந்து கிடைக்கும் களநிலவரங்கள் பாஜகவுக்கு எதிராக இருப்பதாகவே கூறுகின்றன.

மணிப்பூர் அரசின் தமிழ் கருத்தரங்கம்
இந்த நிலையில்தான் தமிழ்க் கருத்தரங்கு ஒன்றை மணிப்பூர் பாஜக அரசு நடத்தி இருக்கிறது. தமிழ்- மணிப்பூர் சங்கமம் என்கிற அடிப்படையில் நேற்று இந்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது. தலைநகர் இம்பாலில் நடத்தப்பட்ட இக்கருத்தரங்குக்கு 110 கி.மீ. தொலைவில் உள்ள மோரே நகரில் இருந்து பேருந்துகளில் வந்து தமிழர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபலங்களும் சிறப்பு விருந்தினர்களாகவும் பங்கேற்றனர்.

தமிழர்கள் வசிக்கும் மோரே
தமிழர்களுக்கு மணிப்பூர் பாஜக அரசு முக்கியத்துவம் ஏன் தருகிறது என்பது குறித்து நாம் அங்குள்ள பத்திரிகையாளர்களிடம் பேசினோம். அவர்கள், மணிப்பூரில் ஆயிரக்கணக்கான தமிழ் வாக்காளர்கள் இருக்கின்றனர். இந்தியாவின் கடைசி நகரம் மோரே. இது மணிப்பூர்- மியான்மர் எல்லையில் உள்ளது. மோரே நகரில் பல்லாயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் வசிக்கின்றன. மோரே நகரில் வசிக்கும் தமிழர்கள் இந்துமத நம்பிக்கைகளை தீவிரமாக பின்பற்றக் கூடியவர்கள். ஆண்டுதோறும் மோரே நகரில் தமிழர்கள் நடத்தும் அங்காள பரமேஸ்வரி கோவில் தீமிதி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. மணிப்பூரில் வசிக்கும் பிற இன மக்கள் கூட இந்த விழாவில் பங்கேற்று தீ மிதிப்பது வழக்கம். மோரே தமிழர்களுக்கான தமிழ்ச் சங்கமும் செயல்படுகிறது.

தேர்தலுக்காகவா?
இந்த நிலையில் மணிப்பூர் மாநில ஆளுநராக தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் எல்.கணேசன் அண்மையில் பதவியேற்றார். கடந்த அக்டோபர் மாதம் மோரே நகருக்கு சென்று அங்குள்ள தமிழர்களுடன் உரையாடினார் இல.கணேசன். இதனைத் தொடர்ந்து தற்போது தமிழுக்கான கருத்தரங்கம் நடத்தப்பட்டதும் கூட தேர்தலுக்காக இருக்கலாம் என நினைக்கிறோம் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications