மன்மோகனை பிரதமராக்கியது தப்பாப் போச்சு.. சொல்கிறார் மணிசங்கர அய்யர்
டெல்லி: பிரதமர் பதவியில் மன்மோகன் சிங்கை அமர்த்தியது தவறு என்று பகிரங்கமாக மன்மோகன் சிங்கை சாடியுள்ளார் மணிசங்கர அய்யர்.
டெல்லி உள்ளிட்ட நான்கு மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வியடைந்துள்ளது. இதனால் காங்கிரஸ் வட்டாரம் அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்துள்ளது.
பாஜகவினர் இந்த தோல்வியை மோடி அலைதான் காரணம் என்று கூறுகிறார்கள். ஆம் ஆதமி போன்றோரோ மக்கள் மாற்று அரசியலுக்கு ஆதரவளிக்கத் தொடங்கி விட்டதாக கூற ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் பல்வேறு விதமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு மணிசங்கர அய்யர் அளித்த பேட்டியில், மன்மோகன் சிங்கை பிரதமராக்கியதுதான் காங்கிரஸ் செய்த தவறு என்று கூறியுள்ளார். அந்தத் தவறுதான் காங்கிரஸின் இன்றைய நிலைக்குக் காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே எனக்கு சந்தேகம்
மன்மோகன் சிங்கின் ஞானம் குறித்து நான் ஏற்கனவே பலமுறை கேள்வி எழுப்பியுள்லேன். ஆனால் யாருமே நான் கூறியதை காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.

பெரும் தவறு
மன்மோகன் சிங்கை பிரதமராக்க எடுத்த முடிவுதான் மிகப் பெரிய தவறு. அந்தத் தவறை காங்கிரஸ் செய்திருக்கக் கூடாது. இப்போது அனுபவிக்கிறோம்.

ஒட்டுமொத்தமாக மாற்றுங்கள்
காங்கிரஸ் கட்சியின் அமைப்பையே ஒட்டுமொத்தமாக மாற்ற வேண்டும். எதிர்க்கட்சி வரிசையில் அமர காங்கிரஸ் தயாராக வேண்டும். அதுதான் நம்மை நாமளே புரிந்து கொள்ள உதவும்.

அரசு வேறு, காங்கிரஸ் வேறு...
அரசாங்கம் என்பது வேறு, காங்கிரஸ் கட்சி வேறு. இரண்டையும் சேர்த்துப் பார்க்கக் கூடாது. அதேசமயம், இந்த இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக கூற முடியாது.

பிரதமருக்கும், சோனியாவுக்கும் நல்ல புரிந்துணர்வு
கட்சித் தலைவர் சோனியா காந்திக்கும், பிரதமருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு இருக்கிறது. இருவரும் குறித்த கால இடைவெளியில் சந்திக்கவும் செய்கின்றனர். ஆலோசனைகளையும் நடத்துகின்றனர்.

இப்போது பிரதமரை மாற்றத் தேவையில்லை
மாற்றம் என்று நான் சொல்வதால் பிரதமர் மன்மோகன் சிங்கை மாற்றி விட்டு, ப.சிதம்பரத்தைக் கொண்டு வர வேண்டும் என்று அர்த்தம் இல்லை. அது தவறான கேள்வி. பிரதமரை மாற்ற வேண்டிய அவசியம் இப்போது இல்லை. கட்சியை புதுப்பிக்க வேண்டும். ராஜீவ் காந்தி கூட அதைத்தான் அன்றே சொன்னார். கட்சியை முழுமையாக மாற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.

உஷாராகாவிட்டால் கஷ்டமாகி விடும்
ராஜீவ் சொன்ன யோசனைகள், அவரால் நியமிக்கப்பட்ட உமாசங்கர் தீட்சித் கமிட்டி கூறிய அறிவுரைகள், பரிந்துரைகள், ஏ.கே.அந்தோணி குழு பரிந்துரைத்தவை ஆகியவற்றை காங்கிரஸ் தலைமை சீரியஸாக சிந்திக்க வேண்டிய நிலை வந்து விட்டது. அதை நாம் கவனித்து சரிப்படுத்தாவிட்டால், வரும் தேர்தலில் கஷ்டமான நிலை ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

சோனியா வேறு என்ன செய்ய முடியும்...
சட்டசபைத் தேர்தல் தோல்விக்கு தானே பொறுப்பேற்பதாக சோனியா காந்தி ஏற்கனவே கூறி விட்டார். இதற்கு மேல் அவர் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்றார் அய்யர்.












Click it and Unblock the Notifications