ரூபாய் நோட்டு விவகாரம்: மத்திய அரசின் மாபெரும் நிர்வாக தோல்வி அம்பலம்: மன்மோகன்சிங் 'பொளேர்'
ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசு நிர்வாக தோல்வி அடைந்துவிட்டது என மன்மோகன்சிங் சாடினார்.
டெல்லி: ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் மாபெரும் நிர்வாக தோல்வி அம்பலமாகிவிட்டது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் சாடியுள்ளார்.
ராஜ்யசபாவில் இன்று ரூபாய் நோட்டு தொடர்பான விவாதம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடியும் ராஜ்யசபாவுக்கு வருகை தந்திருந்தார். அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது:

மத்திய அரசின் ஊழல் மற்றும் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையை நாங்கள் யாரும் எதிர்க்கவில்லை என்பதை நினவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கையானது மத்திய அரசின் நிர்வாக தோல்வியை வெளிப்படுத்திவிட்டது.
மத்திய அரசின் நடவடிக்கை திட்டமிட்ட, சட்டப்பூர்வமான ஒரு கொள்ளை, திருட்டுதான். இனியேனும் இந்த தேசத்தின் ஏழைகளின் துயரத்துக்கு தீர்வுகாண நல்ல முடிவுகளை பிரதமர் எடுப்பார் என நம்பிக்கையோடு இருக்கிறோம்.
ஏழை மக்கள் தங்களது சொந்த பணத்தை வங்கிக் கணக்கில் எடுக்க முடியாத துயரம் இருக்கிறது. இந்த நடவடிக்கையால் நாட்டின் எதிர்கால பொருளாதார வளர்ச்சி 2% குறையும்.
இந்த நடவடிக்கையால் ரூபாய் மற்றும் வங்கிகள் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிடுவர்.
இவ்வாறு மன்மோகன்சிங் கூறினார்.












Click it and Unblock the Notifications