வரலாற்றில் பல முதல்வர்கள் சிறையில் இருந்துள்ளனர்.. முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பாஜக மறைமுக எச்சரிக்கை!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பான அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அம்மாநில பாஜக மறைமுக செய்தியை பகிர்ந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் 2016ம் ஆண்டில் மேற்கு வங்க கல்வி துறையில் நடைபெற்ற ஆசிரியர் நியமனத்தில் பெரிய அளவில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. முதலில் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில், ஆசிரியர் பணி நியமனத்தில் பெரிய அளவில் பணப் பரிமாற்ற மோசடி நடைபெற்றது தெரியவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையில் இறங்கியது. அண்மையில் மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது.

இந்த சோதனையில், பல கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க நகைகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். குறிப்பாக, பார்த்தா சட்டர்ஜியின் நெருங்கிய உதவியாளரும், நடிகையுமான அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து சுமார் ரூ.50 கோடி கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது வீட்டில் உள்ள அனைத்து பணமும் பார்த்தா சட்டர்ஜிக்கு சொந்தமானது என அர்பிதா முகர்ஜி அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பார்த்தா சட்டர்ஜிக்கு எதிராக ஆதாரங்கள் வலுவாகி வருவதால், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார்.
இந்த நிலையில் பாஜக தலைவர் அமித் மால்வியா, மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் பேசும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் முன்னாள் ஆளுநர் ஜெக்தீப் தங்கர், அரசுப் பணிகளில் நடைபெற்ற சிறிய மோசடிகளில் பல முதலமைச்சர்கள் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று பேசியுள்ளார். இதனைக் குறிப்பிட்டு அமித் மால்வியா, முன்னாள் ஆளுநர் ஜெக்தீப் தங்கருக்கு ஆசிரியர் நியமனங்கள் நடைபெற்ற ஊழல் தொடர்பாக ஏராளமான தகவல்கள் தெரிந்திருந்தன.
அதனால் தான் ஆசிரியர் நியமன ஊழலை, அனைத்து ஊழல்களை விடவும் பெரியது என்று கூறியுள்ளார். இந்தத் தகவல் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கும் என்றும் விமர்சித்துள்ளார். இதன்மூலம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி விரைவில் சிறை செல்வார் என்று பாஜக தரப்பில் மறைமுக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications