தாய்லாந்து வளைகுடாவிலிருந்து வந்த புதிய காற்றழுத்தம்.. நிறைய மழைக்கு வாய்ப்பு!
மும்பை: தாய்லாந்து வளைகுடாவிலிருந்து உருவாகி, வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புதிய குறைந்த காற்றழுத்தம் காரணமாக தென் இந்தியாவின் பல பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அதேசமயம், வட இந்தியாவில் கடும் குளிருக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையத் தகவல்கள் தெரிவிக்கிந்றன.
நவம்பர் மாதத்தில் ஆரம்பத்திலிருந்தே நாடு முழுவதும் பரவலாக குளிர் சூழல் காணப்படுகிறது. நவம்பர் 11ம் தேதியன்று, அதாவது நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் குறைந்தபட்ச வெப்ப நிலையாக - 8.1 டிகிரி செல்ஷியஸ் பதிவாகியுள்ளது. ஹிமாச்சல் பிரதேச மாநிலம் சிம்லாவில் 9.2 டிகிரி செல்ஷியஸ் பதிவானது.
அதேபோல வட இந்தியாவின் பல பகுதிகளில் 10 முதல் 15 டிகிரி செல்ஷியஸ் வரை சராசரியாக பதிவானது. பஞ்சாப், ஹரியானாவில் சராசரியாக 10 டிகிரியாக இது இருந்தது.

அதிக மழைக்கு வாய்ப்பு...
டெல்லியில் 11.2 டிகிரியாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த குளிர் சூழல் இன்னும் ஒரு வாரத்திற்கு நீடிக்கலாம் என்று வானிலை மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், வங்கக் கடல் குறைந்த காற்றழுத்தம் காரணமாக தென் இந்தியாவில் அதிக மழைக்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புயல்கள்...
வடக்கு இந்தியப் பெருங்கடலில் அக்டோபர் மாதம் முதலே நல்ல மழைச் சூழல் காணப்படுகிறது. இது சந்தோஷம் தரும் செய்தியாகும். ஆந்திராவை அக்டோபர் 12ம் தேதி ஹூட் ஹுட் புயல் தாக்கியது. அதேபோல அரபிக் கடலில் நிலோபர் புயல் உருவானது.

பலவீனமடைந்த காற்றழுத்தம்...
கடந்த வாரத்தில், வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறலாம் என எதிர்பார்க்ப்பட்டது. ஆனால் அது பலவீனமடைந்து விட்டது. ஆனால் இந்த காற்றழுத்தம் காரணமாக மத்திய இந்தியாவில் தட்பவெப்பம் குளிராக மாற உதவியாக இருந்தது.

தென் இந்தியாவில் மழை...
தற்போது அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக தென் இந்தியாவில் நல்ல மழை பெய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

புயலாக மாற வாய்ப்பில்லை...
அதேபோல தாய்லாந்து விரிகுடாவில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி அது வங்கக் கடலுக்குள் புகுந்துள்ளது. இது செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி வங்கக் கடலின் தென்பகுதியில் நிலை கொண்டிருந்தது. இது மேற்கு வட மேற்கில், வடக்கு இலங்கை, தென் இந்தியாவை நோக்கி நகர்ந்து வருகிறது. ஆனால் இது புயலாக மாறக் கூடிய வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

காற்றழுத்தம் காரணமாக...
அதேசமயம், தமிழகக் கடலோரப் பகுதிகளில் இந்த காற்றழுத்தம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications