சிறைக் கைதிகளை விடுவிக்காததற்கு "மிகப் பெரிய விலை" கொடுப்பீங்க: ஒடிஷாவுக்கு மாவோயிஸ்டுகள் வார்னிங்!
மல்காங்கிரி: ஒடிஷா மாநில அரசு உறுதியளித்தபடி சிறைக் கைதிகளை விடுவிக்காததற்கு எதிர்காலத்தில் மிகப் பெரிய விலை கொடுக்க நேரிடும் என்று மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக ஆயிரக்கணக்கான அப்பாவி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஒடிஷாவின் ரலேகடா மலைப் பகுதியில் மாவோயிஸ்டுகள் பொதுக்கூட்டம் நடத்தினர்.
இந்த பொதுக்கூட்டத்தில் பெரும் திரளான பழங்குடி இனமக்கள் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் பேசிய மூத்த மாவோயிஸ்டு தலைவர்கள், மல்காங்கிரி மாவட்ட ஆட்சியராக இருந்த வினீல் குமாரை கடத்திய போது, அவரை விடுவிப்பதற்காக சிறைக் கைதிகளை விடுதலை செய்வதாக ஒடிஷா அரசு உறுதி அளித்தது.
ஆனால் அந்த வாக்குறுதியை இன்னமும் ஒடிஷா அரசு நிறைவேற்றவில்லை. இதற்காக எதிர்காலத்தில் மிகப் பெரிய விலையை ஒடிஷா மாநில அரசு கொடுக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளனர்.
இதனால் மாவோயிஸ்டுகள் மிகப் பெரிய தாக்குதல் நடத்தவோ அல்லது முக்கிய பிரமுகர்கள் யாரையேனும் கடத்தவோ வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications