கேரளாவில் மாவோயிஸ்டுகளுடன் போலீசார் பயங்கர துப்பாக்கி சண்டை!
பாலக்காடு: கேரளாவில் மாவோயிஸ்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் அட்டப்பாடி பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து மாவோயிஸ்டுகளை வேட்டையாட தண்டர்போல்ட் எனும் அதிரடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து தகவல் கிடைத்ததும் புதூரில் இருந்து கவுடியார்கண்டி நோக்கி போலீசார் சென்று கொண்டிருந்தனர். அப்போது வெள்ளகண்டி என்ற இடத்தில் போலீசார் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து போலீசாரும் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினர். இருதரப்புக்கும் இடையே சுமார் அரை மணிநேரம் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இதில் போலீசார் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அதே நேரத்தில் மாவோயிஸ்டுகள் சிலருக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவர்கள் சிகிச்சைக்காக பக்கத்தில் உள்ள நகரங்களுக்கு வர வாய்ப்பிருப்பதாகவும் அப்பகுதியில் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து தண்டர்போல்ட் அதிரடிப்படையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து தமிழகம், கர்நாடகா எல்லைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications