வறட்சிக் கொடுமை... தற்கொலைக்கு அனுமதி கோரி 40 கல்லூரி மாணவர்கள் கலெக்டருக்குக் கடிதம்
அவுரங்காபாத்: மராட்டிய மாநிலத்தில் வறட்சிக் கொடுமையால் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த 40 மாணவர்கள் தாங்கள் தற்கொலை செய்து கொள்ள அனுமதி தர வேண்டும் என மரத்வாடா மாவட்ட ஆட்சியாளருக்கு கடிதம் எழுதியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலத்தில் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர் விவசாயிகள். அதிலும் குறிப்பாக லாத்தூர் மாவட்டம், மரத்வாடா மண்டலத்தில் வறட்சி காரணமாக விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அப்பகுதி விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த 40 மாணவர்கள் லாத்தூர் மகாத்மா பஸ்வேஷ்வர் கல்லூரியில் பயின்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அம்மாவட்ட ஆட்சியாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
அதில், ‘‘வறட்சி காரணமாக எங்களது பெற்றோர் ஏற்கனவே பண பிரச்சினையில் சிக்கி தவிக்கிறார்கள். ஆகையால், எங்களது கல்வி செலவை அவர்களால் ஏற்க முடியவில்லை. எனவே, நாங்கள் தற்கொலை செய்துகொள்ள அனுமதி தாருங்கள்'' என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரே கல்லூரியைச் சேர்ந்த 40 மாணவர்கள், தற்கொலை செய்துகொள்ள அனுமதி வேண்டி எழுதியுள்ள இக்கடிதத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications