சிறையில் பூத்த காதல்... இப்போது விடுதலை, ஆனால் சந்தோஷம் இல்லை... சினிமாவை மிஞ்சும் ரேவதியின் கதை!
மைசூரு: தனது 16 வயதில் கொலைக் குற்றத்திற்காகச் சிறை சென்ற ரேவதி என்ற பெண், தற்போது 14 ஆண்டுகளுக்குப் பின் ரிலீசாகி உள்ளார். சிறுமியாக சிறைக்குச் சென்ற இப்பெண் தற்போது திருமதியாக, ஒரு குழந்தைக்கு தாயாக விடுதலையாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலத்தில் நன்னடத்தையின் அடிப்படையில் நேற்று மாலை பல்வேறு சிறைகளில் இருந்து 14 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்த 375 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேர் பெண்கள் ஆவர்.

இந்த 13 பேரில் ஒருவர் தான் ரேவதி. இவர் மைசூரு மத்திய சிறையிலிருந்து நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் சோகத்துடன்தான் அவர் விடுதலையாகி வெளியே வந்துள்ளார்.
தனது 16 வயதில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றவர் ரேவதி. தான் வீட்டுவேலை செய்த வீட்டு உரிமையாளரான பெண்ணைக் கொலை செய்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார். ரேவதியை அவர் பாலியல் தொழிலாளியாக்க முற்பட்டபோது, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இந்தக் கொலையை அவர் செய்துள்ளார்.
ஆனால், சிறையில் தனது வயதிற்கான ஆதாரத்தை ரேவதியால் சமர்ப்பிக்க இயலவில்லை. இதனால் ரேவதிக்கு 18 வயதானதாக ஆவணங்களில் பதிவானது. அதனைத் தொடர்ந்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
சிறை சென்ற ரேவதி, அங்கு தன்னை விட 10 வருடம் மூத்தவரான அன்புராஜ் என்பவரோடு அறிமுகம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. சந்தனக்கடத்தல் வீரப்பனுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் வாங்கிக் கொடுத்ததற்காக அன்புராஜுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்தக் காதல் ஜோடி, கடந்த 2011ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு தம்பதியாக மாறியது. தற்போது அவர்களுக்கு 9 மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்தச் சூழ்நிலையில் தான் தற்போது ரேவதிக்கு நன்னடத்தைக் காரணமாக விடுதலை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கணவரைப் பிரிந்து சிறையில் இருந்து வெளியேறியுள்ளார் ரேவதி. ஏற்கனவே 23 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்புராஜ், இனி மீதி காலங்களையும் அங்கேயே கழிக்க வேண்டியது தான்.
விடுதலைக்குப் பின் திருப்பூர் செல்லவுள்ள ரேவதி அங்குள்ள தனது உறவினர்கள் உதவியுடன் வேலை செய்து குழந்தையை வளர்க்க திட்டமிட்டுள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் ரேவதி தையல் கற்றுக் கொண்டார். எனவே, அதனையே தொழிலாகக் கொண்டு வாழ அவர் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications