திருப்பதி கோவிந்தராஜ சாமி கோவில் அருகே பற்றி எரிந்த தீ..எங்கும் புகைமூட்டம்..தவித்த பக்தர்கள்
திருப்பதி: கோவிந்தராஜசாமி கோவில் அருகே பற்றி எரிந்த தீயினால் திருப்பதி நகரத்தில் பல பகுதிகளில் புகை மூட்டமாக காணப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தினால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவில் அருகே போட்டோபிரேம் கடை உள்ளது. இங்கு சாமி படங்கள், அரசியல் கட்சி படங்களை பிரேம் செய்து விற்பனை செய்ய கூடிய 3 மாடிகள் கொண்ட புகைப்பட கடையாகவும் உள்ளது. தீடீரென லாவண்யா போட்டோபிரேம் கடையில் பற்றிய தீ மளமளவென வேகமாக பரவியது. உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்த மற்ற வியாபாரிகள், பக்தர்கள், பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.

இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துவந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 3 கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் சில நிமிடங்களில் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தால் போட்டோ கடையில் இருந்த 50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து தேசமடைந்து இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், கோவிலுக்கு அருகில் உள்ள போட்டோ பிரேம் கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக திருப்பதி காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார். திருப்பதியில் மலை மேல் உள்ள ஏழுமலையானை தரிசனம் செய்யும் முன்னர் பக்தர்கள் கோவிந்தராஜசாமியை தரிசனம் செய்வது வழக்கம். இன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்த நிலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதைப் பார்த்து அச்சமடைந்தனர்.












Click it and Unblock the Notifications