'மோடி மாடலில்' இருந்து நாட்டு மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்: சோனியா காட்டம்
சண்டிகர்: மோடியின் குஜராத் மாடல் அரசிடமிருந்து கடவுள்தான் நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பர்னாலாவில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய சோனியாகாந்தி, பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் மோடியை கடுமையாக தாக்கி பேசினார்.

சோனியா பேசியதாவது:
குஜராத் மாடல் அரசை அளிக்க வாக்களிக்குமாறு மோடி தனது பிரச்சாரங்களின்போது கூறி வருகிறார். அப்படி ஒரு குஜராத் மாடல் அரசாங்கத்திடமிருந்து கடவுள்தான் இந்திய மக்களை காப்பாற்ற வேண்டும்.
இந்த மாடலினால் குஜராத்தில் என்ன நடந்தது? 50 வருடங்களாக குஜராத்தில் உள்ள சீக்கியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.
பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அகாலிதளம் குஜராத்திலுள்ள சீக்கியர்கள் படும் துன்பங்கள் குறித்து பேச தயங்குகிறது. குஜராத்தில் ஒவ்வொரு வினாடியும், ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகிறது. இதுதான் மோடி மாடல்.
குஜராத்தில் 45ஆயிரம் ஏக்கர் நிலம் ஒரே ஒரு தொழிலதிபருக்கு குறைந்த விலையில் அளிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் உள்ள மக்களுக்கு இன்னும், குடிநீர் சரிவர கிடைக்கவில்லை. பாஜவின் கொள்கையில் ஒரு மனிதன் திறமை அடிப்படையில் இனம் காணப்படுவதில்லை. மதத்தின், மொழியின், ஜாதியின் அடிப்டையில்தான் இனம் காணப்படுவார்கள்.
பாஜவினர் குறுகிய மனப்பாங்குடன், நாட்டு மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் வகையில் செயல்படுபவர்கள். அதிகார பசி கொண்டவர்கள்.
பாஜவின் செயல்பாடுகள் ஒருவர் கையில் அதிகாரத்தை திணி்ப்பதாக உள்ளது. நாட்டின் ஏழை எளிய மக்கள் தங்களது உரிமைக்காக பிச்சை எடுக்கும் நிலைக்கு பாஜக கொண்டு சென்றுவிடும். ஆனால் காங்கிரசின் கொள்கையோ, ஏழை, விவசாயிகள் போன்றோருக்கு முன்னேற்றம் அளிப்பதுதான். காங்கிரஸ் மதசார்பில்லாமல் மக்களை அணுக கூடியது.
இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.












Click it and Unblock the Notifications