குஜராத் கலவரத்தின் போது பிரசவம் பார்த்துக் கொண்டிருந்தாராம் மாயா கோட்னானி: நீதிமன்றத்தில் சாட்சியம்
குஜராத் கலவரம் நடந்த போது மாயா கோட்னானி மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக் கொண்டிருந்ததாக தாகூர் என்பவர் சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.
குஜராத்: உலகையே உலுக்கியது சிறுபான்மையினர் மீதான குஜராத் படுகொலை. 97 பேர் கொல்லப்பட்ட நரோடா காம் படுகொலையின் முக்கிய குற்றவாளியாக நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ள மாயா கோட்னானி, கலவரத்தின் போது மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக் கொண்டிருந்ததாக, தாகூர் என்பவர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் 2002-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி நரோடா காம் என்ற இடத்தில் மிகப் பெரிய வன்முறை வெடித்தது. இதில் 97 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் நரேந்திர மோடி குஜராத் மாநில அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மாயா கோட்னானி, முன்னாள் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பாபு பஜ்ரங்கி உள்பட 70 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோட்னானி, பஜ்ரங்கி உட்பட 32 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தது. இதில் கோட்னானிக்கு 28 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை தற்போது சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் போது தாகூர் என்பவர் சாட்சியம் அளித்தார். அப்போது, தனியார் மருத்துவமனை ஒன்றில் தனது மருமகள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், அந்த மருத்துவமனையில் மாயா கோட்னானி மகப்பேர் மருத்துவராகப் பணியாற்றி வந்ததைத் தான் பார்த்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், மாலை 5.30 மணி வரை மாயா கோட்னானி மருத்துவமனையில் பிரசவம் பார்த்ததாகவும் தாகூர் கூறியுள்ளார். கோட்னானியின் கணவரான சுரேந்திர கோட்னானியும் ஏற்கனவே இதையே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications