'மாயன் நாள்காட்டி' 2012இல் உலகம் அழியும் என்று கணித்தது உண்மையா?

Subscribe to Oneindia Tamil
மாயா காலத்து அரண்மனை
Reuters
மாயா காலத்து அரண்மனை

(உலக நாடுகள் மற்றும் தமிழர்களின் வரலாறு மற்றும் தொல்லியல் தொடர்பான சிறப்புக் கட்டுரைகளை 'வரலாற்றுப் பதிவுகள்' என்ற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில், எட்டாம் கட்டுரை இது.)

மாயா நாகரிகம், மெசோ அமெரிக்கா (மத்திய கால அமெரிக்கா) என்ற இடத்தில் தோன்றியது. மிகப்பெரிய பரப்பளவைக் கொண்ட இந்த இடம், மத்திய அமெரிக்காவின் மெக்சிகோவை உள்ளடக்கியது.

அந்த காலத்தில் மாயா (மாயா என்பது மக்கள் பின்பற்றிய நாகரிகம், அவர்கள் பேசும் மொழி மாயன்) மக்கள், பிரமிப்பூட்டும் திக்கல் போன்ற பல நகரங்களை கட்டியெழுப்பினார்கள்.

https://twitter.com/ajtzib/status/1380209518890647554

வெவ்வேறு நகரங்களில் வாழ்ந்த மாயன்களை, வெவ்வேறு மன்னர்களும் மகாராணிகளும் ஆட்சி செய்தார்கள்.

இருந்தபோதும், அவர்கள் தங்களுக்குள்ளாக ஒரு பொதுவான நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தை கொண்டிருந்தார்கள்.

வானில் நட்சத்திரங்களை படிப்பது, விண்ணுலக வரைபடத்தை பிரதிபலிக்கும் நகரங்களை கட்டியெழுப்பியது என வியத்தகு படைப்புகளை அவர்கள் உலகுக்கு வழங்கினர்.

மழைக்காடுகளில் வாழும் உயிரினங்களால் ஈர்க்கப்பட்ட அவர்கள், விலங்குகள், தாவரங்கள், ஆவிகளுடன் தொடர்பில் இருத்தல் போன்ற பல வழக்கத்தை அவர்கள் கொண்டிருந்தார்கள்.

இந்த மாயன்கள் பழங்காலத்திலேயே மண்ணுலகம் 2012ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் நாள் முடிவுக்கு வரும் என்று கணித்திருந்ததாக ஒரு கூற்று நிலவுகிறது. அது எந்த அளவுக்கு உண்மை?

யார் இந்த மாயா சமூகம்?

மாயா காலத்து அரண்மனை
Reuters
மாயா காலத்து அரண்மனை

மாயா என்பது ஓரு கலாசாரம். இன்றளவும் அது வழக்கத்தில் உள்ளது. மத்திய அமெரிக்காவின் மெக்சிகோ உள்ளிட்ட சில நாடுகளில் மாயா வாழ்வியல் முறைகளை கடைப்பிடிக்கும் சுமார் 70 லட்சம் பேர் வாழ்கிறார்கள்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த கலாசாரம் அழியாமல் இருக்க வழிவழியாக அதை மாயா மக்கள் பின்பற்றி வருகிறார்கள்.

கிறிஸ்துவுக்கு முந்தைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த பிராந்தியங்களில் மாயா நாகரிகம் தழைத்திருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

கிறிஸ்துவுக்குப் பிந்தைய மூன்றாம் நூற்றாண்டில், இந்த பிராந்தியங்கள் நகர்ப்புறமாகி நவீன காலத்துக்குள் அடியெடுத்து வைத்தன.

அப்போது முதல் கி.பி 900ஆம் நூற்றாண்டுவரை அந்த நாகரிகம் தழைத்தது. இதன் மூலம் கொலம்பிய நாகரிகத்துக்கு முந்தைய, மிகவும் மேம்பட்ட நாகரிகமாக மாயா நாகரிகத்தை வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆனால், அந்த நூற்றாண்டுக்குப் பிறகு படிப்படியாக மாயா நாகரிகம் வீழ்ச்சியடையத் தொடங்கியது. அதன் பல நகரங்களில் இருந்தும் மக்கள் வெளியேறினர் அல்லது இறந்து போனார்கள்.

ஐரோப்பிய படையெடுப்பு

மாயாக்களின் கோவில்
Getty Images
மாயாக்களின் கோவில்

ஐரோப்பியர்களின் புத்துலக கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து, மாயா நிலப்பகுதிகள் பலவற்றை ஸ்பேனிஷ் படையினர் கைப்பற்றினார்கள்.

அதனால், பழங்காலத்திலேயே மாயா நாகரிகமும் அவர்களின் கலாசார செல்வாக்கும் சரியத் தொடங்கியது. அங்கு ஸ்பேனிஷ் கலாசாரம் படிப்படியாக வேரூன்றி பழங்கால உலக நாகரிகத்தை ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. அது அங்கு வாழ்ந்த மக்களை, விரிவடைந்த ரோமன் கத்தோலிக்க சமயத்தை தழுவத் தூண்டியது.

மாயா நாகரிக காலத்தில் கணிக்கப்பட்டதாக சொல்லப்படும் '2012ஆம் ஆண்டில் உலகம் முடிவுக்கு வரும்' என உலா வரும் சாராம்சம், அந்த பிராந்தியத்தில் வாழும் தற்கால மக்களை விட, நவீன கால மாயா கலாசாரத்தை பின்பற்றும் மக்களை மையப்படுத்தியே கணிக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

மாயா மக்களுக்கும் 2012க்கும் என்ன தொடர்பு?

மாயா சமூகத்தினர், வெவ்வேறு நேர அளவீடுகளை அணுக, பல்வேறு நாள்காட்டி முறைகளை கொண்டிருந்தனர்.

உதாரணமாக, அவர்களின் வேளாண் சுழற்சி வருடாந்திர நாள்காட்டி, தற்போது நாம் கடைப்பிடிக்கும் வருடங்களில் 5,126 முழு நீள வருடங்களை கொண்டதாக நீண்டிருந்தது.

அவை 2,000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டிருந்தன. ஆனாலும், அவை கிறிஸ்துவுக்கு முந்தைய நான்காயிரம் ஆண்டுகளில் இருந்தே கணிக்கப்பட்டதாக அறிய முடிகிறது.

அந்த வகையில் மாயா கணக்கீட்டின்படி, அவர்களுடைய மிக நீளமான விவசாய பருவகால சுழற்சி முடிவு பெறும் வருடம் 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதவாக்கில் வருவதாக நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். அதில் டிசம்பர் 21ஆம் தேதி என்பது பரவலான தேர்வாக அமைந்திருக்கிறது.

2012இல் உலகம் அழியும் என மாயா நாகரிக காலத்தில் கணிக்கப்பட்டதா?

மாயன் மொழி பேசும் மாயா மக்களின் வரலாற்றை ஆய்வு செய்யும் ஆர்வலர்களிடம் இந்த கேள்வியை கேட்டால், அவர்கள், ஆணித்தரமாக "இல்லை" என்றே பதிலளிக்கிறார்கள்.

In The Order of Days: The Maya World and the Truth about 2012 என்ற தமது புத்தகத்தில் வரலாற்றாய்வாளரும் பேராசிரியருமான டேவிட் ஸ்டுவார்ட், "மாயா வரலாறு தொடர்பான எந்தவொரு குறிப்பேட்டிலும் உலகம் 2012இல் முடிவுக்கு வரும் என்றோ அவர்கள் கணித்த நீண்ட நெடிய வருட சுழற்சிக்காலத்தில் எந்தவொரு பகுதியிலும் அழிவுகரமான முடிவு ஏற்படும் என்பதையோ மாயாக்கள் கணிக்கவில்லை," என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, மாயாக்கள் அப்படி கணிக்கவில்லை என சந்தேகத்துக்கு இடமின்றி தாம் நம்புவதாக பேராசிரியர் டேவிட் ஸ்டுவார்ட் கூறுகிறார்.

ஆனால், 1960களில் தெற்கு மெக்சிகோவில் கண்டுபிடிக்கப்பட்ட டோர்டுவெரோ கால தொல்பொருள் படிமம் மட்டுமே, 2012ஆம் ஆண்டில் ஏற்படக்கூடிய நிகழ்வை மாயாக்கள் கணித்திருந்ததை வெளிப்படுத்தக் கூடிய ஒரே ஆதாரமாக இன்றளவும் விளங்கி வருகிறது.

இடை அமெரிக்க கால எழுத்து முறையான மாயன் எழுத்துகள் இடம்பெற்ற அந்த படிமத்தில் மாயா நாள்காட்டியின் நீண்ட பருவகால சுழற்சியின் கணக்கீடு இடம்பெற்றிருந்தது. ஆனால், அதில் சில எழுத்துகள் படிக்க முடியாத வகையில் இருந்தன.

இதன் மூலம் மாயா நாகரிக காலத்தில் வேளாண் பருவகால சுழற்சியை கணிக்கும் நாள்காட்டியை பற்றியே அவர்கள் கணக்கீடு செய்திருந்தார்கள் என்பதும், அது உலக அழிவுக்கான கணிப்பு அல்ல என்பதும் தெளிவாகிறது.

மாயா நம்பிக்கை

மாயாக்களின் கோவில்
Getty Images
மாயாக்களின் கோவில்

மாயன் மொழி பேசும் மாயாக்கள், பல கடவுள் நம்பிக்கையை கொண்டிருந்தனர். அவர்களைப் பொருத்தவர், ஒவ்வொரு கடவுளும் வாழ்வின் வெவ்வேறு அம்சங்களின் அடையாளமாக விளங்கினர். சில சமூகங்கள் இறைவனுக்காக விலங்குகளை படையலிட்டனர். சில நேரங்களில் அது நரபலியாகவும் இருந்தது.

உலகம் மிகப்பெரிய ஆமை வடிவிலானது என்றும் அது முடிவற்ற பெருங்கடலில் நீந்திச் செல்வதாகவும் வான் பரப்பை 'பேக்கப்ஸ்' என்ற நான்கு வல்லமை பொருந்திய கடவுள்கள் தாங்கிப்பிடித்திருப்பதாகவும் மாயாக்கள் நம்பினர்.

மாயாக்களின் நம்பிக்கையின்படி, இறைவனை அடையக்கூடிய வானம், 13 நிலைகளாக உள்ளன. உயிர்த்தியாகம் அல்லது போரில் வீர மரணம் அடைந்தவர்கள் உச்ச நிலையை அடைவர். இயற்கை மரணம் அடைந்தவர்கள் ஜிபால்பா எனப்படும் ஒன்பது நிலையைக் கொண்ட நிழலுகுக்கு செல்கிறார்கள் என்பதும் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை.

'ஆதி மாயா' கால வாழ்க்கை

மாயா ஆளுகையில் மிகவும் பிரபலமானவராக அறியப்படுபவர் மன்னர் பாக்கல் பேரரசு என்று அழைக்கப்படும் கின்னிக் ஜனாப் பாக்கல். மாயா பிரதேசத்தின் பலெங்க் பகுதியில் அவர் 68 ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார். பழங்கால மாயா உலகில் வேறு எந்த ஆட்சியாளரும் இத்தனை ஆண்டுகளுக்கு ஆளுகை புரியவில்லை.

இன்றைய காலத்தில் வாழும் சிறார்களைப் போல அன்றைய சிறார்களின் வாழ்க்கை இருந்திருக்கவில்லை. தங்களுடைய வசிப்பிடங்களில் அவர்கள் வழக்கத்துக்கும் குறைவான சிறிய ஆடைகளையே அணிந்திருந்தனர்.

யாக்ஸ் முட்டல், பெலங்க் போன்ற பெரிய நகரங்களில் வேளாண் விளை நிலங்கள் சூழ்ந்த பகுதிக்கு மத்தியில் அவர்கள் வீடு கட்டி வாழ்ந்து வந்தனர்.

பெரியவர்கள் - விவசாயிகள், போர் வீரர்கள், வேட்டையாளர்கள், ஆசிரியர்கள் போன்ற பணிகளை செய்தனர். வசதி படைத்த குடும்பங்களில் இருந்து வந்த சிறார்கள் கணிதம், அறிவியல், எழுத்துமுறை, வானியல் அறிவியல் போன்றவற்றை படித்தனர். வறியநிலை சிறார்களுக்கான கல்வி, அவர்களின் பெற்றோராலேயே போதிக்கப்பட்டது.

மாயாக்கள் விட்டுச் சென்ற அடையாளங்கள் என்ன?

மாயாக்களின் சூரிய கோவில்
Getty Images
மாயாக்களின் சூரிய கோவில்

தொன்மையான மாயா காலத்தின் அடிநாதமாக இருந்த முதன்மைத் தொழில் விவசாயம். ஆனால், விவசாயத்தோடு நின்று விடாமல் அந்த மக்கள் புத்தாக்க படைப்புகளை உலகுக்கு வழங்கினர். வியப்பூட்டும் பிரமிட்டுகள், கட்டடங்கள், விலை உயர்ந்த பச்சை மாணிக்கக் கல் மூலம் தயாரிக்கப்பட்ட அழகிய பொருட்கள் உலகில் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கும் திறமைக்கும் சான்று கூறுகின்றன.

இன்றைய மனித குலத்தின் வாழ்வியல் நெறிமுறைகள் மேம்பட அந்த காலத்தில் மாயாக்கள் கண்டுபிடித்த "பூஜ்ஜியம்" என்ற கோட்பாடு, அவர்கள் உலகுக்கு வழங்கிச் சென்ற முக்கிய பரிசாக பார்க்கப்படுகிறது.

இந்த பூஜ்ஜியத்தை தங்களுடைய காலத்திலேயே அவர்கள் பயன்படுத்தியிருப்பதால், சில நுட்பமான கணக்கீடுகள் அந்த காலத்திலேயே வழக்கத்தில் இருந்திருப்பது தெளிவாகிறது.

துல்லியமான நாட்காட்டிகளை கணக்கிடவும், அந்த நாட்காட்டியைக் கொண்டு வேளாண் பருவ காலத்தை அவர்கள் துல்லியமாக கணக்கிட்ட விதத்தையும் உலகுக்கு அவர்கள் விட்டுச் சென்ற சிறந்த படைப்புகள் என கூறலாம்.

நட்சத்திரங்களை பற்றியும் பருவநிலை பற்றியும் விரிவாக அவர்கள் ஆராய்ந்திருந்தது தான், அவர்களின் கணிப்புகள் வெற்றிகரமாக அமைந்ததற்கு காரணம் என்கிறார்கள் வரலாற்றாய்வாளர்கள்.

அந்த பருவ கால கணக்கீட்டின்படி எந்த பருவத்தில் எதை விளைவிக்கலாம் சாகுபடி செய்யலாம், அறுவடை செய்யலாம், எவை எல்லாம் குறுகிய கால அறுவடைக்கு உகந்தவை போன்ற கணிப்புகளை அவர்கள் செய்திருந்தனர்.

பழங்கால மாயாக்களுக்கு என்ன ஆனது?

மாயா நாகரிகம் மற்றும் அவர்களின் மாயன் மொழி பேசும் மக்கள் தொடர்பாக ஆராய்ச்சி செய்து வந்த வரலாற்றாய்வாளர்கள், கிறிஸ்துவுக்குப் பிறகு 850 முதல் 925ஆம் ஆண்டு காலகட்டத்தில் நவீன மாயா நகரங்கள் அந்த நூற்றாண்டு காலத்தில் சந்தித்த பெரும் வறட்சி காரணமாக வீழ்ச்சி அடைந்தன என்று கூறுகிறார்கள்.

அதாவது ஒன்பதாம் நூற்றாண்டில் பிராந்தியத்தின் தென் பகுதிகளான இன்றைய குவாட்டமாலா மற்றும் பெலீஸ் பகுதி, பெரும்பாலும் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டன. யுகாட்டான் தீபகற்பம் முதல் வடக்குப்பகுதிவரை இந்த வறட்சி தொடர்ந்தபோதும், மாயா நாகரிகம் அதனுடன் சேர்ந்து முற்றிலும் அழியாமல் வறட்சிக்குப் பிந்தைய காலகட்டத்தில் தழைக்கத் தொடங்கியது.

மாயா நாகரிக மக்கள் இன்றும் வாழ்கிறார்களா?

https://twitter.com/ajtzib/status/1373106263295426561

பொதுவாகவே உலகில் வாழும் பலரும், "மாயா மக்கள் கடந்த காலங்களில் மட்டுமே வாழ்ந்தார்கள்," என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பார்கள்.

ஆனால், இன்றும் கூட சுமார் எழுபது லட்சம் மாயா மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள், மத்திய அமெரிக்க நாடுகளின் சில பகுதிகளிலும் தெற்கு மெக்சிகோவிலும் வாழ்கிறார்கள்.

மாயா மக்கள் வாழ்ந்த பகுதிகளை ஸ்பேனிஷ் படை ஆக்கிரமித்ததால் அவர்களின் மக்கள்தொகை சரிந்தது. ஆனாலும், அந்த மக்கள் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்து வந்ததால், அந்த நாகரிகம் இன்றளவும் கூட அவர்களின் வழி, வழியாக வந்த மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 31 வகை மாயா மொழி பேசும் மக்கள் இன்றளவும் வாழ்கிறார்கள்.

எனினும், இனவேற்றுமை காரணமாக அந்த மொழிகளும் அழிவின் விளிம்பில் இருப்பவையாக கருதப்படுகின்றன. அவர்கள் வாழ்ந்த பிராந்தியத்தில் மாயன் மொழி பேசுபவராக இருந்தால், வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் அறிய முடிகிறது.

இதனால் அழியும் நிலையில் இருக்கும் தங்களுடைய மொழியை பாதுகாக்க அது பற்றிய இலக்கியம் மற்றும் மொழி சார்ந்த குறிப்புகளை சிலர் மாயன் மொழியிலும், ஸ்பேனிஷ் மொழியிலும் பதிவு செய்து வருகிறார்கள்.

மாயா நாகர மக்கள், உலகின் முடிவை கணிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், பழங்கால மாயா நாகரிகத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நெறிகள், அறிவுசார் முறைகள், கண்டுபிடிப்புகள் போன்றவை, இன்றைய அறிஞர்களையும் விஞ்ஞானிகளையும் கூட வியப்படைய வைக்கின்றன.

மாயா நாகரிகத்தின் பிரமிப்பூட்டும் படைப்புகளில் குறிப்பிடத்தக்கது, உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான சிச்சன் இட்ஸா நகரில் உள்ள பிரமிட் கோபுரம்.

மெக்சிகோ நாட்டின் யுகட்டான் பகுதியில் உள்ள கொலம்பியாவுக்கு முந்தைய சகாப்தத்துக்கு உட்பட்ட தொல்பொருள் சின்னமாக அது விளங்குகிறது.

மாயா நாள்காட்டி, உலகின் அழிவை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கணித்ததா போன்ற குழப்பங்களுக்கு மத்தியிலும், சிக்கலான முறைகளைக் கொண்டிருந்த அந்த நாள்காட்டி எப்படி தயாரிக்கப்பட்டது என்ற பிரமிப்பை இன்றளவும் ஏற்படுத்தி வருகிறது.

கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் உள்ளடக்கிய அந்த மாயா நாள்காட்டி நவீன கால மனித குல வளர்ச்சிக்கு திறவுகோலாக இருந்தது என்றால் அது மிகையாகாது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+