பாஜகவும், ‛இந்தியா’ கூட்டணியும் வேண்டாம்! லோக்சபா தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் தனித்து போட்டி
லக்னோ: லோக்சபா தேர்தலில் 'பகுஜன் சமாஜ் கட்சி' தனித்து போட்டியிடுவதாக அதன் தலைவர் மாயாவதி அறிவித்திருக்கிறார். தேர்தலில் மூன்றாவது அணியை பகுஜன் சமாஜ் கட்சி உருவாக்குகிறது என்று பரவும் தகவல்கள் வதந்தி என்றும் அவர் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலை பொறுத்த அளவில் உத்தரப் பிரதேசம் முக்கியமான மாநிலமாகும். ஏனெனில் நாட்டில் வேறெந்த மாநிலத்தை காட்டிலும் இங்குதான் அதிக தொகுதிகள் இருக்கின்றன. எனவே தேர்தலில் வெற்றி பெற வேண்டும் எனில் உத்தரப் பிரதேசத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும். அந்த வகையில் இம்மாநிலத்தில் களமிறங்கும் கட்சிகளின் அரசியல் நகர்வுகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இப்படி இருக்கையில் உ.பி அரசியலின் முக்கியமான கட்சியாக கருதப்படும் மாயாவதியின், 'பகுஜன் சமாஜ் கட்சி' தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறது. பாஜகவை எதிர்த்து காங்கிரஸ், 'இந்தியா' கூட்டணியை அமைத்திருக்கிறது. இந்த உ.பியின் மற்றொரு பிரதான கட்சியான 'சமாஜ்வாதி கட்சி' இணைந்திருக்கிறது. அதேபோல பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்தால் இதன் பலம் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
ஆனால், இது குறித்து மாயாவதி எதையும் கூறவில்லை. மறுபுறம் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை அவ்வப்போது தெளிவுபடுத்தி வந்தார். எனவே, மாயாவதி 3வது அணியை உருவாக்குகிறார் என்கிற பேச்சும் அடிப்பட தொடங்கியது. இந்நிலையில் இந்த சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, எதிர்வரும் லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக மாயாவதி அறிவித்திருக்கிறார்.
இவரின் அரசியில் நிலைப்பாட்டை எதிர்க்கட்சியினர் விமர்சித்துள்ளனர். அதாவது இவர் தனித்து நிற்பதால் வாக்குகள் பிரிந்து அது பாஜகவுக்குதான் சாதகமாக போகும் என்று கூறியுள்ளனர். இதற்கு உதாரணமாக சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலை சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பீகாரின் கோபால்கஞ்ச் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மோகன் பிரசாத் குப்தாவும், பாஜக சார்பில் குசும் தேவியும் போட்டியிட்டனர். தேர்தல் முடிவில் குசும் தேவி, 70,053 வாக்குகள் வெற்றி பெற்றார். அதே சமயம் காங்கிரஸின் மோகன் பிரசாரத், 68,259 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் வெறும் 1,794 தான்.
இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவெனில், இந்த தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரசுக்கு ஆதரவளிக்காமல் தனித்து போட்டியிட்டது. அதேபோல அசாதுதீன் ஓவையின் கட்சியும் தனித்து களமிறங்கியது. இருவருக்கும் முறையே 8,853 மற்றும் 12,214 வாக்குகள் கிடைத்தன. இது குசும் தேவிக்கும் மோகன் பிரசாத் குப்தாவுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசத்தைக் காட்டிலும் 12 மடங்கு அதிகமாகும்.
இதுபோன்ற பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டி, பகுஜன் சமாஜ் கட்சி மீது எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. முன்னதாக மாயாவதி உண்மையிலேயே பாஜகவை எதிர்ப்பதாக இருந்தால் அவரது பகுஜன் சமாஜ் கட்சி 'இந்தியா' கூட்டணியில் இணைய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான பிரமோத் திவாரி அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications