ஒத்த சீட்டும் இல்லைதான்.. 2 கோடி ஓட்டு எங்களுக்கே.. நாங்களே 3வது பெரிய கட்சி: இது மாயாவதி
லக்னோ: லோக்சபா தேர்தலில் ஒரு இடத்தையும் கைப்பற்றாமல் போனாலும் 2 கோடி வாக்குகளைப் பெற்றிருப்பதால் நாங்களே நாட்டின் மூன்றாவது பெரிய கட்சி என்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றது. மாநிலத்தில் ஆளும் கட்சியான சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்தன.
மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பாஜக 71; சமாஜ்வாடி -5 ; காங்கிரஸ் 2 இடங்களில்தான் வென்றன. மற்றொரு பிரதான கட்சியான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி முட்டைதான் வாங்கியது.
இந்த தேர்தல் முடிவுகள் தொடர்பாக லக்னோவில் செய்தியாளர்களிடம் மாயாவதி கூறியதாவது:
2009 தேர்தலில் பெற்ற வாக்குகளை விட தற்போது அதிக வாக்குகளைப் பெற்றுள்ளோம். நாங்கள் இந்தியாவின் மூன்றாவது கட்சி. கடந்த தேர்தலில் 1.51 கோடி வாக்கே பெற்றோம் ஆனால் இந்த முறை அதைவிட அதிகமான வாக்குகளை பெற்றுள்ளோம்.
எங்களுடைய வாக்கு எங்கும் போய்விடவில்லை. இஸ்லாமியர்கள் மற்றும் உயர் வகுப்பினர் வாக்குகள் பிரிந்ததால் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர் என்பதை இந்த தீர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த எதிர்மறையான தீர்ப்பு எங்கள் கட்சி மற்றும் பிற கட்சிகளை பாதித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி 42% ஓட்டுக்களே பெற்றுள்ளனர். இதனுடைய அர்த்தம் 58 சதவீத மக்கள் பாரதிய ஜனதாவை ஆதரிக்கவில்லை என்பதே.
இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.