டெல்லி: உபேர் நிறுவனத்தின் ஒரே பெண் டிரைவர் பர்வீன்
டெல்லி: டெல்லியில் செயல்படும் உபேர் டாக்சி நிறுவனத்தின் ஒரே பெண் டிரைவர் ஜமாருத் பர்வீன் ஆவார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பிஜ்னோரைச் சேர்ந்தவர் ஜமாருத் பர்வீன்(21). அவர் டெல்லியில் உபேர் டாக்சிகளை ஓட்டி வருகிறார். தலையில் முக்காடு அணிந்து அவர் டாக்சி ஓட்டும் அழகை பார்த்து பெண் பயணிகள் பெருமிதம் அடைந்துள்ளனர். டெல்லியில் உபேர் டாக்சி ஓட்டும் ஒரே பெண் பர்வீன் தான்.
உபேர் டாக்சி டிரைவர்கள் பாலியல் பலாத்காரம், பெண் பயணிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து பிரச்சனையில் சிக்கியுள்ள வேளையில் பர்வீன் அந்நிறுவனத்தில் சேர்ந்துள்ளார். அவர் கடந்த 2 மாதங்களாக டாக்சி ஓட்டிக் கொண்டிருக்கிறார்.
பிஜ்னோரில் எட்டாம் வகுப்பு வரை படித்த பிறகு பர்வீன் தனது பெற்றோர் மற்றும் 3 தங்கைகளுடன் டெல்லிக்கு வந்துள்ளார். பர்வீனின் தந்தை ஒரு கட்டிடத் தொழிலாளி ஆவார். பர்வீனின் தங்கை ஜோயாவுக்கு (19) திருமணம் ஆகிவிட்டது. பர்வீன் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு அவரை கார் ஓட்டக் கற்றுக் கொள்ளுமாறு அவரது தாய் வலியுறுத்தியுள்ளார். அவரது வலியுறுத்தலின்பேரில் தான் அவர் கார் ஓட்ட கற்றுக் கொண்டுள்ளார்.
பர்வீன் கல்லூரியில் படித்துக் கொண்டே டாக்சி ஓட்டுகிறார். டாக்சி ஓட்டி வரும் பணத்தில் தனது குடும்பத்திற்கு உதவுகிறார். பர்வீனுக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் டாக்சி ஓட்ட மிகவும் பிடிக்குமாம்.