ஒரு மாத மின் கட்டணம் ரூ.85 கோடி: ஹரியானா நபரின் தலையில் இடியை இறக்கிய மின்வாரியம்
சன்டிகர்: ஹரியானாவைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஒரு மாத மின்சார கட்டணம் ரூ.85 கோடி என்று வந்ததை பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
ஹரியானா மாநிலம் சன்டிகரைச் சேர்ந்தவர் ஹெச்.எஸ். வர்மா. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அவரின் தலையில் இடியை இறக்கியுள்ளது அம்மாநில மின்வாரியம். அதாவது ஒரு மாத மின் கட்டணமாக ரூ.85 கோடி செலுத்த வேண்டும் என்று அவருக்கு பில் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து வர்மா கூறுகையில்,
வழக்கமாக மாதம் ரூ.2 ஆயிரத்து 200 முதல் ரூ.2 ஆயிரத்து 500 வரை தான் மின் கட்டணம் வரும். ஆனால் இம்முறை ரூ.85 கோடி கட்டணமாக வந்துள்ளது. இதனால் நாங்கள் பெரிய பிரச்சனையில் சிக்கியுள்ளோம் என்றார்.
முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள கோஹனா நகரைச் சேர்ந்த பான் கடை நடத்தி வரும் ராஜேஷ் என்பவரின் ஒரு மாத மின் கட்டணம் ரூ.132 கோடி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கும் முன்பு கடந்த 2007ம் ஆண்டு ஹரியானாவில் உள்ள நார்நவ்ல் நகரைச் சேர்ந்த முராரி லால் என்பவரின் 2 படுக்கையறை கொண்ட வீட்டின் ஒரு மாத மின் கட்டணம் ரூ.234 கோடி வந்தது.












Click it and Unblock the Notifications