பாஜகவுக்கு எதிராக பல லட்சம்பேர் திரண்ட பேரணி-ஒரே மேடையில் லாலு, மம்தா, அகிலேஷ், சரத் யாதவ்
பாஜகவிடம் இருந்து "இந்தியாவை காப்போம்" என்ற பெயரிலான லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி நடத்திய பேரணியில் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், சரத் யாதவ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பாட்னா: "இந்தியாவை பாதுகாப்போம்" என்ற பெயரில் லாலு பிரசாத் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணியில் இன்று ஒரே மேடையில் லாலு, மம்தா, அகிலேஷ், சரத் யாதவ் கலந்து கொண்டனர்.
கடந்த 2015-ஆம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்டவை இணைந்து மகா கூட்டணியை அமைத்து போட்டியிட்டு வெற்றி வெற்றது. நிதிஷ்குமார் முதல்வராகவும், லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.
மீண்டும் முதல்வரானார் நிதிஷ்குமார்
இந்நிலையில் மாட்டு தீவன ஊழல் வழக்கில் தேஜஸ்வி மீதும் குற்றம்சாட்டப்பட்டதால் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய நிதிஷ்குமார் அறிவுறுத்தினார். எனினும் அவர் ராஜினாமா செய்யாததால், முதல்வர் நிதிஷ்குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து பாஜக ஆதரவுடன் பீகாரில் மீண்டும் நிதிஷ்குமார் முதல்வரானார்.
பாஜக மீது லாலுவுக்கு அதிருப்தி
பீகாரில் மறைமுகமாக பாஜக ஆட்சி நடத்த இதுபோன்ற தந்திரங்களை மேற்கொண்டதாக பாஜக மீது லாலு அதிருப்தி கொண்டார். இதை கருத்தில் கொண்டு பாஜகவிடம் இருந்து இந்தியாவை காப்போம் என்ற பெயரில் மெகா பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தினார். இதில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்காத 17 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
சோனியா பங்கேற்கவில்லை
தலைநகர் பாட்னாவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத் பேரணியில் பங்கேற்றார்.
லோக்சபா தேர்தலுக்கான கூட்டம்
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பொதுச்செயலாளர் சரத் யாதவ் ஆகியோர் பங்கேற்றனர். இந்த பொதுக் கூட்டம் 2019-இல் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில் பாஜகவை எதிர்க்கவே இந்த ஒருங்கிணைப்பு கூட்டம் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். பல லட்சம் பேர் இந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.