மேகாலயாவில் 5 போலீசார் சுட்டுக்கொலை: காரோ இயக்க போராளிகள் அட்டூழியம்
ஷில்லாங்: மேகாலயா மாநிலத்தில் 5 போலீசாரை காரோ இயக்கப் போராளிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மேகாலயாவின் மேற்கு பகுதி காரோ மலைப்பகுதியில் கைதி ஒருவரை அழைத்துக்கொண்டு பகுமாரா என்னுமிடத்திற்கு 5 போலீசார் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அடர்ந்த காட்டுப்பகுதியில் உள்ள பாங்ஜகோனா கிராமத்தில் சென்ற போது அந்த வாகனத்தின் மீது போராளிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 5 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
போலீசாரிடம் இருந்த 3 துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை போராளிகள் கைப்பற்றி சென்றனர். அந்த வாகனத்தில் இருந்த கைதி தப்பித்து சென்று விட்டாரா? அல்லது போராளிகள் அவரை மீட்டுச் சென்றுவிட்டனரா என்பது பற்றிய தகவல்கள் தெரியவில்லை.
கடந்த வாரம், இப்பகுதியில் இயங்கி வரும் ஒரு கமாண்டர் ஒருவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி அவரது மைத்துனர் மற்றும் 4 பேரை கைது செய்தனர். இதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
காரோ மலைப்பகுதியை தனி பிராந்தியமாக அறிவிக்க வலியுறுத்தி போராடி வரும் காரோ தேசிய விடுதலை ராணுவம் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications