நம்ம முதல்வர் அழுது மூக்கைச் சிந்தினார்... இந்த முதல்வரோ பாடி பரவசப்படுத்துகிறார்..!
ஷில்லாங்: உன் கண்ணில் நீர் வழிந்தால்.. என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என்று பாடாத குறையாக... பதவியேற்பின்போது நமது முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.. கண்ணீர் செல்வமாக மாறி நெகிழ வைத்தார். ஆனால் அதற்கு அப்படியே நேர் மாறாக, மேகாலயா முதல்வர் முகுல் சங்மா உற்சாகமாக பாட்டுப் பாடி மக்களை மகிழ வைத்துள்ளார்.
தான் ஒரு சிறந்த பாடகர் என்பதையும் இதன் மூலம் முகுல் சங்மா மக்களுக்கு விளக்கியும் விட்டார். உண்மையிலேயே அவரது பாட்டைக் கேட்டு கூடியிருந்தவர்கள் உற்சாகமாகிப் போனார்கள். கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது.
கொல்கத்தாவில் மேகாலயா அரசு சார்பில் மேகாலயா இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. அதை சமீபத்தில் திறந்து வைத்தார் சங்மா. இந்த நிகழ்ச்சியில்தான் அவர் பாட்டுப் பாடி கவர்ந்தார்.
நிகழ்ச்சியில் சங்மா பேசுகையில், வடகிழக்கு மாநிலங்கள் குறித்து தவறான கருத்து பிற பகுதி மக்களிடையே நிலவுகிறது. அதை போர்க்களமாகவே மக்கள் பார்க்கிறார்கள். உண்மை அதுவல்ல. அதற்காக நான் வருத்தப்படுகிறேன். வட கிழக்கு மாநிலங்களில் பல நல்ல விஷயங்களும் உள்ளன. அதை மீடியாக்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார் சங்மா.
எல்லா விரல்களும் ஒரே மாதிரியாகவா இருக்கும்.. அதுபோலத்தான் எல்லா முதல்வர்களும் ஒரே மாதிரியா இருப்பார்கள்!
உண்மையிலேயே மேகலாயா மக்கள் கொடுத்து வைத்தவர்கள்தான்!