கிலானியை சந்தித்தேன்.. மோடி தூதராக போகலை: பஸ்வான் கட்சி சஞ்சய் சரஃப் தகவல்
ஸ்ரீநகர்/ லக்னோ: காஷ்மீர் பிரிவினை இயக்க தலைவர் கிலானியை தாம் சந்தித்தது உண்மைதான் என்றும் ஆனால் நரேந்திர மோடியின் தூதராக செல்லவில்லை என்றும் ராம்விலாஸ் பாஸ்வான் கட்சியின் சஞ்சய் சரஃப் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் விடுதலை கோரும் ஹூரியத் மாநாட்டு கட்சியின் தலைவர் கிலானி அண்மையில் நரேந்திர மோடியின் தூதர்கள் காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச தம்மை சந்தித்ததாக கூறியிருந்தார். இது சர்ச்சையை கிளப்பியிருந்தது.
பின்னர் பாஸ்வான் கட்சியின் சஞ்சய் சரஃப்பும் தம்மை சந்தித்தார் என்று கிலானி பெயரை வெளியிட்டார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த சஞ்சய் சரஃப், கிலானி எனக்கு நீண்டகால நெருங்கிய நண்பர். அவரை நான் சந்தித்தது உண்மைதான்.
ஆனால் எங்களது சந்திப்பானது தனிப்பட்ட முறையிலானது. நான் மோடியின் தூதராகவும் போகவில்லை. எந்த ஒரு செய்தியையும் எடுத்துச் செல்லவும் இல்லை. அப்படி செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கிறேன் என்றார்.