கிரீன்பீஸ் அமைப்பு மீது மத்திய அரசு அதிரடி நடவடிக்கை! வங்கி கணக்குகள் முடக்கம்!!
டெல்லி: நாட்டின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்ததாக கூறி சர்வதேச அமைப்பான "கிரீன்பீஸ்" தொண்டு நிறுவனத்தின் இந்திய பதிவை உள்துறை அமைச்சகம் சஸ்பென்ட் செய்துள்ளது. மேலும் அந்த அமைப்பின் வங்கிக் கணக்குகளையும் மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது.
கிரீன்பீஸ் என்பது சர்வதேச சுற்றுச் சூழல் தொண்டு நிறுவனம்... இந்தியாவில் செயல்படும் இந்த அமைப்புக்கு பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் நிதி உதவி அளிக்கின்றன.

இந்தியாவில் நிலக்கரி சுரங்க திட்டங்கள் பலவும் சுற்றுச் சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக கூறி கிரீன் பீஸ் அமைப்பு பிரசாரம் மற்றும் போராட்டங்களை நடத்துவதற்கு உறுதுணையாக இருந்து வருகிறது. இதனால் இந்த அமைப்பின் செயல்பாடுகள் மீது மத்திய அரசு தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கிரீன்பீஸ் நிறுவனம் மிகவும் முட்டுக்கட்டையாக இருக்கிறது என்று உளவுத்துறையும் எச்சரிக்கை விடுத்திருந்தது. அண்மையில் இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்கள் என்பவை சுற்றுச் சூழலுக்கு எதிராக இருக்கிறது என்பதை லண்டனில் சென்று பிரசாரம் செய்ய கிரீன்பீஸ் அமைப்பின் பிரியா பிள்ளை திட்டமிட்டிருந்தார்.
ஆனால் உளவுத்துறையோ பிரியா பிள்ளையை தேடப்படும் நபராக அறிவிக்கப்பட அவர் இங்கிலாந்து செல்லும் முயற்சி முறியடிக்கப்பட்டது. இப்படி மத்திய அரசுடன் நீண்டகாலமாக மல்லுக்கட்டி வருகிறது கிரீன்பீஸ் அமைப்பு.
இந்நிலையில்தான் இன்று அதிரடியாக அந்த அமைப்பின் இந்திய பதிவை உள்துறை அமைச்சகம் சஸ்பென்ட் செய்து வைத்துள்ளது. அத்துடன் அதன் 7 வங்கிக் கணக்குகளையும் மத்திய அரசு முடக்கியிருக்கிறது.
இதனால் கிரீன்பீஸ் அமைப்பின் அனைத்து கிளைகளின் நடவடிக்கைகளும் இன்று முதல் 180 நாட்களுக்கு முடக்கப்படும். அத்துடன் இந்த நடவடிக்கையை எதிர்த்து 30 நாட்களுக்குள் கிரீன்பீஸ் அமைப்பு மேல்முறையீடும் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications