'ஆண்ட்ராய்ட் போனில் ஆகாசவாணி'... மனம் கவர்ந்த பழைய பாடல்களை இனி போனில் கேட்கலாம்!
மும்பை: அப்போதெல்லாம், யாரைப் பார்த்தாலும் தூர்தர்ஷன் போட்ட ஒலியும் ஒளியும் பாடல்களையும், ஆல் இந்திய ரேடியோவின் பழைய பாடல்களையும் கேட்டு உயிர் வாழ்ந்து வந்த காலம். காரணம், இப்போது உள்ளது போல தனியார் சேனல்களின் பெருக்கமோ, எப்எம் ரேடியோக்களோ அப்போது இல்லை. ஆனால் மீண்டும் அந்த பழைய வசந்த காலம் திரும்பி வரப் போகிறது.
அக்காலத்தில் வெள்ளிக்கிழமை தோறும் தூர்தர்ஷனின் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சிகளைப் பார்க்க மக்கள் அலை மோதுவார்கள். ஆனால் இனறு நிலைமை தலைகீழாகி விட்டது. ஆனாலும் ஒலியும் ஒளிக்கு உள்ள அந்த பிரபலம், மவுசு, பெயர் இன்னும் அப்படியேதான் உள்ளது.
அதேபோலத்தான் ரேடியோவில் பாட்டு கேட்பதும். சின்னச் சின்ன டிரான்சிஸ்டர்களை காதுகளோடு ஒட்டிவைத்துப் பாட்டு கேட்ட வேலை பார்த்த காலம் அது. இன்று எப்எம் ரேடியோக்கள் காதுகளைக் கிழித்துக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் பழைய பொக்கிஷத்தை மீண்டும் மக்களுக்குக் கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு களத்தில் இறங்கியுள்ளது.
ஸ்மார்ட் போனில் ஆல் இந்தியா ரேடியோ.....
தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோவின் பழைய நிகழ்ச்சிகளை இனி ஸ்மார்ட் போனில் கேட்பதற்கு வசதியாக புதிய அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
புத்தக வெளியீட்டு விழா...
மும்பையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் மத்திய தகவல் ஒளிபரப்புதுறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டார். அந்த புத்தகம் தூர்தர்ஷன் உள்ளிட்டவற்றில் ஒளிபரப்பப்பட்டவற்றின் பழைய ஒலிப்பதிவுகள் எங்கு கிடைக்கும் என்பதை பற்றிய புத்தகமாகும்.
பாடல் ஆவணங்கள்....
இதனை வெளியிட்டு, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், "ஆகாசவாணியில் சுமார் 4 லட்சம் ஒலிப்பதிவுகள், தூர்தர்ஷனில் சுமார் 3 லட்சம் ஒளிப்பதிவுகள் ஆவணங்களில் உள்ளன."
புதிய வரலாறு...
தற்போது அது பொதுமக்களுக்கு கிடைக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தனை அற்புதமான கால பொக்கிஷம் மக்களுக்கு பல்வேறு புதிய வரலாறுகளை நினைவில் கொண்டு வரும். இவை அனைத்தையும் ஸ்மார்ட் போன் அப்ளிகேஷனில் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் கூறியுள்ளார்.
மீண்டும் வாய்ப்பு...
இதன் மூலம் அந்தக் காலத்தில் கேட்ட, பார்த்து ரசித்த நிகழ்ச்சிகளை மீண்டும் காணும், கேட்கும் மிகப் பெரிய வாய்ப்பு மக்களுக்குக் கிடைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.