இனிமே கூகுள், கூகுள் பண்ணி பார்க்க வேணாம்... அதையும் மிஞ்ச வருகிறது புதிய தேடுபொறி!
கூகுளின் செயல்திறனை விட அதிக செயல்திறனும், வேகமும் கொண்ட புதிய தேடுபொறி ஒன்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட இருக்கிறது.
காரக்பூர்: கூகுளின் செயல்திறனை விட அதிக செயல்திறனும், வேகமும் கொண்ட புதிய தேடுபொறி ஒன்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட இருக்கிறது. இணைய உலகத்தில் ஜாம்பவானாக இருக்கும் கூகுளை முந்தும் அளவுக்கு இந்த தேடுபொறி செயல்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த தேடுபொறியினை மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவுடன் சேர்ந்து உருவாக்கப்போகிறது. இதற்காக காரக்பூர் ஐஐடியில் உள்ள ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த தேடுபொறி யாரும் எண்ணிப்பார்க்க முடியாத அளவில் அதிக செயல்திறனுடன் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அடுத்த வருடம் இறுதிக்குள் இந்த தேடுபொறி பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
மைரோசாப்ட்டின் பிங்
இணைய உலகத்தில் தற்போது முடி சூடா மன்னனாக இருப்பது கூகுள் மட்டுமே. யூ-டியூப், மேப்ஸ், டிரைவ், மெயில் என் கூகுள் வெளியிட்ட எல்லா தயாரிப்புகளும் வெற்றிநடைபோட்டு வருகின்றது. இந்த நிலையில் கூகுளை போலவே சில தேடுபொறிகளும் மக்களுக்கு தெரியாமல் புழக்கத்தில் இருக்கிறது. யாஹூ, பிங் ஆகியவை கொஞ்சம் பிரபலமானவை. இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு சொந்தமான பிங் தேடுபொறிக்கு தற்போது மூடுவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்தியாவுடன் கை கோர்க்கும் மைக்ரோசாப்ட்
சரியாக பயன்பாட்டில் இல்லாத தேடுபொறி எஞ்சினை மூடிவிட்டு புதிய அதிக செயலை திறன் கொண்ட சர்ச் எஞ்சினை உருவாக்கும் முடிவில் இறங்கி இருக்கிறது கூகுள் நிறுவனம். இதற்காக கூகுள் நிறுவனம் தற்போது இந்தியாவில் இருக்கும் கராக்பூர் ஐஐடி உடன் இணைந்து செய்லபட இருக்கிறது. ஐஐடியில் இருக்கும் ஆய்வு மாணவர்களுடன் இணைந்து இன்னும் ஆறுமாதங்களுக்கு ஆராய்ச்சியில் ஈடுபடும் என்று கூறப்படுகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த சர்ச் என்ஜின் அடுத்த வருட இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
இதன் புதிய பயன் என்ன
இந்த சர்ச் என்ஜின் மூலம் நிறைய பர்சனல் சார்ந்த தகவல்களை பெறலாம் என கூறப்படுகிறது. உங்கள் அனுமதியுடன் நீங்கள் எந்த தெருவில் தங்கி இருக்கிறீர்கள் என்பதை பிறர் இந்த சர்ச் என்ஜினில் தேடி கண்டுபிடிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நமக்கு மனதில் ஏற்படும் குறைபாடுகள், தனிமை இதை எல்லாம் பற்றி கூட கேள்வி கேட்கலாம் என்றும் கூறப்படுகிறது. கூகுளில் செய்ய முடியாத எல்லா பயன்பாடுகளும் இதில் இணைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சர்ச் என்ஜின் எப்படி செயல்படும்
இந்த சர்ச் என்ஜின் நமது பேஸ்புக், டிவிட்டர் பக்கங்களுடன் இணைந்து செயல்படும். மேலும் அங்கு மக்கள் பேசிக் கொள்ளும் விஷயங்கள், மக்கள் பயன்படுத்தும் ஹேஸ்டேக்குகள் ஆகியவற்றை கொண்டு நமது சர்ச் முடிவுகளை வெளியிடும் என்று கூறியிருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் நமது பேஸ்புக், டிவிட்டர் பயன்பாடுகள் மூலம் நமக்கு என்று தனியான சர்ச் முடிவுகளை வெளியிடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.