ராஜஸ்தானில் கட்டடம் மீது விழுந்து நொறுங்கிய மிக் 27 விமானம்.. பைலட்கள் தப்பினர்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பார்மர் அருகே ஜோத்பூர் விமானப்படை தளத்திலிருந்து கிளம்பிய மிக் 27 ரக போர் விமானம் இன்று கட்டடம் ஒன்றின் மீது விழுந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக பைலட்டும், துணை பைலட்டும் உயிர் தப்பினர்.
கட்டடத்தில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. விமானம் முழுமையாக சேதமடைந்து விட்டது. இந்திய விமானப்படையில் உள்ள மிக் ரக போர் விமானங்கள் அறுதப் பழசானவை. அடிக்கடி கீழே விழந்து விபத்துக்குள்ளாகி வருகின்றன. இந்த நிலையில் இன்று காலை ஜோத்பூரில் உள்ள விமானப்படை தளத்திலிருந்து கிளம்பிய மிக் 27 ரக விமானம் விமானப்படை தளத்திற்கு அருகே விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது.
அதிர்ஷ்டவசமாக பைலட்டும், துணை பைலட்டும் பாராசூட் மூலம் கீழே குதித்து உயிர் தப்பினர். விழுந்து நொறுங்கிய விமானம், வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும், உத்தரலை என்ற விமான தளத்திற்குக் கிளம்பிய சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விழுந்து நொறுங்கிய விமானத்தின் பாகங்களைக் கண்டுபிடிக்கவும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.