கர்நாடகா, ஆந்திராவில் நிலநடுக்கம்: மக்கள் பீதி
ஹாஸன்: கர்நாடக மாநிலத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாஸன், சிக்மகளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 6.51 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.1 ஆக பதிவாகி இருந்தது.
ஹாஸன், சிக்மகளூர் மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இன்று காலை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நிலம் அதிர்ந்தபோது வீட்டு அலமாரிகளில் இருந்த பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் கீழே விழுந்தன. இதை பார்த்த மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
லேசான அதிர்வு என்ற போதிலும் மக்கள் வீடுகளுக்குள் செல்ல அஞ்சி சில நேரம் தெருக்களில் நின்று கொண்டிருந்தனர்.
நிலநடுக்கத்தால் சில கிராமங்களில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரா:
ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர், பிரகாசம் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.09 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவாகியிருந்தது. ஓங்கோலில் இருந்து 60 முதல் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.