லடாக்கில் மலரும் அமைதி! பாங்காங் ஏரியில் இருந்து வெளியேறும் பீரங்கி வண்டிகள், போர் வாகனங்கள்!
லடாக்: லடாக் எல்லையின் பாங்காங் ஏரியின் கரையில் இருந்து இந்தியா, சீனா நாடுகளின் பீரங்கி தாங்கிய வண்டிகள் மற்றும் ராணுவப் படை வாகனங்கள் வெளியேற தொடங்கி உள்ளன.
இரு நாட்டு போர் வாகனங்கள் வெளியேற்றப்படுவது ஏழு நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.
கிழக்கு லடாக்கின் நிலைமையை உறுதிப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் பயனுள்ள முயற்சிகளை தொடரவும் இரு நாட்டு ராணுவமும் முடிவு செய்தன.
ஒரு இன்ச் நிலத்தை கூட இந்தியா விட்டுக் கொடுக்காது.. சீனாவுக்கு நேரடியாக பதிலடி கொடுத்த ராஜ்நாத் சிங்
லடாக் எல்லை பதற்றம்
இந்தியா - சீனா ராணுவத்தினர் இடையே லடாக் எல்லையில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். தொடர்ந்து எல்லையில் இருதரப்பு படையினரும் குவிக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது. ராணுவ அதிகாரிகள் அளவில் நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து படைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தொடரும் பேச்சுவார்த்தை
பாங்காங் ஏரி கரையில் இரு தரப்புக்கும் இடையே சமீபத்தில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. கடந்த ஒன்பது மாதங்களாக கிழக்கு லடாக்கில் எல்லை நிலைப்பாட்டிற்கு மத்தியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதலில் பங்கோங் ஏரி மையமாக உள்ளது. எல்லை பகுதிதிகளில் பதற்றத்தை தணிக்க இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் நிலையில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது.
படைகளை விலக்கிக் கொள்ள முடிவு
கடந்த மாதம் ஒன்பதாவது சுற்று இராணுவப் பேச்சுவார்த்தை நடந்தது. சுமார் 16 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் இந்தியாவும், சீனாவும் எல்லையில் இருந்து துருப்புக்களை முன்கூட்டியே விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. கிழக்கு லடாக்கின் நிலைமையை உறுதிப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் பயனுள்ள முயற்சிகளை தொடரவும் இரு நாட்டு ராணுவமும் முடிவு செய்தன.
சீனா கருத்து
இந்த நிலையில் இந்த பேச்சுவார்த்தையின் பலனாக பாங்காங் ஏரியின் வடக்கு கரையில் இந்திய, சீன ராணுவம் தங்களது வீரர்களை அங்கிருந்து விலகிக் கொள்ள ஆரம்பித்துள்ளது. சீன தேசிய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சீனியர் கர்னல் வு கியான் இதனை உறுதிப்படுத்தினார். இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இதனை மக்களவையில் உறுதிப்படுத்தினார்.
பீரங்கி வண்டிகள் செல்கின்றன
இந்த நிலையில் பாங்காங் ஏரியின் கரையில் இருந்து இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் பீரங்கி தாங்கிய வண்டிகள் மற்றும் ராணுவப் படை வாகனங்கள் வெளியேற தொடங்கி உள்ளன. இந்திய டாங்கிகள் நியோமா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளை நோக்கி நகர்த்தப்படுகின்றன, அதே நேரத்தில் சீன ராணுவ வீரர்கள் சிரிஜாப் மற்றும் மோல்டோ காரிஸனைத் தாண்டி அவற்றை மீண்டும் கொண்டு செல்கின்றனர். பாங்காங் ஏரியின் இரு கரைகளிலிருந்தும் இரு நாட்டு போர் வாகனங்கள் வெளியேற்றப்படுவது ஏழு நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.