ஆபத்தை எதிர்கொள்ள தயாராக இருங்கள்... விமானப்படை விழாவில் பிரணாப் பேச்சு
பெங்களூரு: ஆபத்துக்கள் சூழ்ந்துள்ள நிலையில் தனது பலத்தை நிரூபிக்க இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்று விமானப்படை அதிகாரிகள் மத்தியில் பேசிய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
தெஸ்பூர் விமான படை மையத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இந்திய விமானப்படையின் 115 ஹெலிகாப்டர் யூனிட் மற்றும் 26 ஸ்கோட்ரான் படைப்பிரிவுகளுக்கு உயரிய 'குடியரசு தலைவர்' விருது வழங்கி கவுரவித்தார்.

அந்த விழாவில் முகர்ஜி பேசுகையில், "அனைத்து துறைகளிலும் இந்தியா தற்போது வளர்ச்சியடைந்து வருகிறது. அதேபோல பாதுகாப்பு துறையும் வளர்ச்சியடைய வேண்டியது அவசியம். அனைத்து தரப்புக்கும் சம நியாயம் என்று நம்பும் நாடு இந்தியா. அந்த சமத்துவத்தை பாதுகாப்பு படைகள் ஏற்படுத்தி கொடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
கன்னியாகுமரி முதல் இமயம் வரையில் விமானப்படை வீரர்கள் தேசத்தை பெருமைப்பட செய்துள்ளனர். பல்வேறு சர்வதேச பயிற்சிகளின்போது இந்திய விமானப்படையினரின் சாகசங்களை பார்த்து பல நாட்டவர்களும் வியப்பு தெரிவித்துள்ளனர். 115 ஹெலிகாப்டர் யூனிட் 1967ல் சண்டீகரில் துவங்கப்பட்டது. எம்ஐ-4 ஹெலிகாப்டர் அதன் முதல் படைப்பாக இருந்தது. 1971ம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின்போது, சண்டீகர் யூனிட் நமது ராணுவத்திற்கு பலதரப்பட்ட உதவிகளை செய்தது. மீட்பு மற்றும் தேடுதல் பணிகளில் இந்த ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.

26 ஸ்கோட்ரான் (போர்வீரர் படை) 1968ல் உருவாக்கப்பட்டது. இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தில் இந்த படை பிரிவு முக்கிய பங்காற்றியது. 1999ம் ஆண்டு கார்கில் யுத்தத்தின்போதும் இப்படைப் பிரிவு இந்திய வெற்றியில் முக்கிய பங்காற்றியது. இவ்வாறு பிரணாப் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications