சீர்காழி மழை.. மோடி ஆறுதல்கூட சொல்லல! இது இந்தியா தானே? குஜராத்தாக இருந்தால்.. அமைச்சர் மெய்யநாதன்
மயிலாடுதுறை: 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருமழை பாதிப்புகளை சந்தித்து உள்ள சீர்காழி மக்களுக்கு பிரதமர் ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை என அமைச்சர் மெய்யநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் நவம்பர் தொடக்கத்தில் இருந்து தீவிரம் அடையத் தொடங்கிய வடகிழக்கு பருவமழை காரணமாக வங்கக் கடலில் கடந்த வாரம் புதன்கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.
வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்த இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி கடந்த வாரம் வியாழக்கிழமை தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டது.

சீர்காழியில் பெருமழை
நாகை அருகே வலுவடைந்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தபோது மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரு மழை கொட்டித்தீர்த்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அதிகபட்சமாக 44 சென்டி மீட்டர் பெருமழை கொட்டித் தீர்த்தது. பெருமழை காரணமாக சீர்காழி, தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகள் வெள்ளக்காடாக மாறி உள்ளன.

வெள்ளம்
122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த பெருமழை வெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பை சந்தித்தது. குடியிருப்புகள் மட்டுமின்றி விவசாய நிலங்கள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் என பல பகுதிகள் நீரில் மூழ்கின. மாணவ மாணவிகளின் புத்தகங்களும் சேதமடைந்தன. அரசின் தொடர் முயற்சியால் தற்போது மழை நீர் வெள்ளம் பெரும் அளவில் வடிந்து உள்ளது.

முதலமைச்சர் ஆய்வு
கடந்த 14 ஆம் தேதி சீர்காழி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து நேற்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மயிலாடுதுறை மாவட்டத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் மெய்யநாதன்
கடந்த 13 ஆம் தேதி சீர்காழியில் ஆய்வுக்கு சென்ற அமைச்சர் மெய்யநாதன், "பள்ளி, கல்லூரிகளை திறக்க வாய்ப்புகள் இல்லை. தண்ணீர் சூழ்ந்த பகுதியாக இது உள்ளது. மாணவர்களின் புத்தகங்கள் சேதமடைந்து உள்ளன. எனவே இங்கு பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கு சற்று காலதாமதம் ஆகும்.

பள்ளிகளுக்கு விடுமுறை
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும்." என்றார். இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டிலேயே மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

பிரதமர் மீது குற்றச்சாட்டு
தொடர்ந்து சீர்காழியில் தங்கி இருந்து பணிகளை கவனித்து வரும் அமைச்சர் மெய்யநாதன், நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "122 ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதியில் மிக கனமழை பெய்து இருக்கிறது. இந்தியாவிற்குள்தான் தமிழ்நாடு உள்ளது. இந்திய பிரதமர் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை.

நிதி ஒதுக்கீடு
இதுவே மற்ற மாநிலங்களாக இருந்தால் உடனடியாக இந்திய பிரதமர் பார்வையிட்டு நிதி ஒதுக்கீடு செய்து இருப்பார். இந்த பாதிப்புகளுக்கு சிறப்பு நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யாத நிலையில், உண்மைக்கு புறம்பான போலியான செய்திகளை பரப்புவதில் நியாயம் என்ன இருக்கிறது?

மாற்றாந்தாய் மனநிலை
குஜராத், ராஜஸ்தான் இந்த பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக நிவாரண உதவி வழங்குவதும், தமிழ்நாடு போன்ற மாநிலங்களை புறக்கணிப்பதும் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மனப்பான்மையொடு நடத்தப்படும் நிலை என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்." என்றார்.












Click it and Unblock the Notifications