தேர்தல் விதி மீறல் வழக்கில் சிறை: மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கைது -ஜாமீனில் விடுதலை
ராம்பூர், உ.பி.: மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு தேர்தல் விதி மீறல் வழக்கில் உ.பி மாநிலம் ராம்பூரில் உள்ள கோர்ட் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்ததைத் தொடர்ந்து அவரைப் போலீஸார் கைது செய்தனர். பின்னர் சிறிது நேரத்திலேயே அவர் ஜாமீனில் விடுதலையானார்.
கடந்த 2009ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின்போது, நக்வி மற்றும் அவருடன் வந்தவர்களின் கார்களை போலீஸார் சோதனைக்காக மடக்கி நிறுத்தினர். அப்போது நக்வியின் ஆதரவாளர்கள் அதை எதிர்த்து போராட்டத்தில் குதித்தனர். காவல் நிலையம் முன்பாக அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது ஆதரவாளர்கள் மத்தியில் நக்வி பேசினார்.

இதையடுத்து தேர்தல் நடத்தை விதியை மீறும் வகையில், சட்டவிரோதமாக கூடியதாக கூறி நக்வி மீது ராம்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் நக்விக்கு ஒரு வருட சிறைத் தண்டனை விதித்து ராம்பூர் கோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து போலீஸார் நக்வியைக் கைது செய்தனர். இதையடுத்து நக்வி சார்பில் ஜாமீன் கோரி மனு செய்யப்பட்டது. அதில் ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து நக்வி விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கு குறித்து நக்வி கூறுகையில் இது அரசியல் உள்நோக்கத்துடன் போடப்பட்ட வழக்கு என்று கூறினார்.
மோடி அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக நக்வி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications