இந்தியாவிலேயே மிகவும் அமைதியான மாநிலம் தமிழ்நாடு! உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் ரகுபதி பேச்சு!
ஹரியானா: இந்தியாவிலேயே மிகவும் அமைதியான மாநிலம் தமிழ்நாடு என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் சுரஜ்குண்டில் நேற்று நடைபெற்ற மாநில உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில், முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் கலந்து கொண்ட அவர் இதனைக் கூறினார்.
மேலும் அந்த மாநாட்டில் அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு;

முதல்வர் சார்பில் ரகுபதி
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையின் கீழ், மிகவும் அமைதியான மாநிலமாகத் இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாடு திகழ்ந்து வருவதாக அமைச்சர் ரகுபதி கூறினார். தமிழ்நாடு அரசு, மாநிலத்தில் அமைதியான சூழலைப் பேணிக்காத்து வருவதுடன், மாநிலத்திலுள்ள மக்கள் பாதுகாப்பு உணர்வுடன் வாழும் சூழலை உருவாக்கியுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார். சட்டம் ஒழுங்கை சிறப்பாகப் பராமரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

தமிழகம் அமைதிப் பூங்கா
இதேபோல் காவல்துறையினை நவீனமயமாக்கல் மற்றும் செலவிடப்படாத நிதி குறித்தும் அமைச்சர் ரகுபதி உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பேசினார். தண்டனை விகிதத்தைப் பொறுத்தவரை, தமிழ்நாடு தேசிய சராசரியான 78.7 விழுக்காட்டைவிட அதிகமாக 93.5% விழுக்காடாக இருப்பது தொடர்பாகவும், தமிழ்நாட்டில் உள்ள எதிரி சொத்துக்கள் தொடர்பாக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் ரகுபதி உரையாற்றினார்.

உள்துறை அமைச்சர்கள்
இந்திய காவல் பணி அதிகாரிகளின் மனிதவள மேம்பாடு , தமிழ்நாட்டிலுள்ள வெளிநாட்டினரால் ஏற்படும் பிரச்சினைகள், இலங்கைத் தமிழர்கள் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான சவால்கள் பற்றி அவர் பேசினார். தமிழ்நாடு அரசு எடுத்துவரும் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகள் பற்றியும் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றியும் நீண்ட விளக்கம் அளித்தார்.

அமைச்சர் பேச்சு
மக்களை அச்சுறுத்தி வரும் சைபர் கிரைம் குற்றங்களை தடுப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், கச்சத்தீவு விவகாரம், கடலில் உள்ள பூஜ்ஜிய அளவு நீர்ப் பொதுப் பகுதியில் தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இலங்கை கடற்படையினரால் நிகழ்த்தப்படும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் உயிரிழந்த / காயமடைந்த தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரணங்கள் ஆகியவை குறித்தும் அமைச்சர் ரகுபதி உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications