ஐடி ரெய்டு பின்னணியில் முதல்வர் சித்தராமையா.. கர்நாடக அமைச்சர் சிவகுமார் தாய் பகீர் குற்றச்சாட்டு!
பெங்களூரில் எரிசக்தித்துறை அமைச்சர் சிவக்குமார் வீட்டில் வருமான வரி சோதனை நடப்பதற்கு முதல்வர் சித்தராமையாதான் காரணம் என்று அமைச்சரின் தாயார் பகிரங்க குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூரு : அமைச்சர் சிவக்குமார் வீட்டில் நடக்கும் வருமான வரி சோதனைக்கு பாஜக தான் காரணம் என்று பலரும் குற்றம்சாட்டிய நிலையில், அமைச்சரின் தாயார் கௌரம்மா வருமான வரி சோதனைக்கு முதல்வர் சித்தராமையா தான் காரணம் என்று பகீர் தகவலைக் கூறியுள்ளார்.
குஜராத் எம்எல்ஏக்களை பெங்களூரில் தங்க வைக்க ஏற்பாடு செய்ததற்காக கர்நாடக அமைச்சர் சிவக்குமார் மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்தமான 70 இடங்களில் கடந்த 2 நாட்களாக வருமான வரி சோதனை நடத்தது.
இதில் கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
மறுப்பு
ஆனால் இதனை மறுத்துள்ள அமைச்சரின் குடும்பத்தினர் சட்டத்திற்கு புறம்பாக ஒரு ரூபாய் கூட வைத்திருக்கவில்லை என்றும், ரூ. 10 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறுவதில் உண்மை இல்லை என்றும் அமைச்சரின் சகோதரர் சுரேஷ் கூறியுள்ளார்.
பாஜக காரணம் என்றனர்
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக பாஜக வருமான வரித்துறையை வைத்து சோதனை நடத்துவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. ஆனால் திடீர் திருப்பமாக அமைச்சர் சிவக்குமாரின் தாயார் கௌரம்மா, வருமான வரிச் சோதனைக்கு பின்புலமாக முதல்வர் சித்தராமையா தான் இருப்பார் என்று தான் நினைப்பதாகக் கூறியுள்ளார்.
கட்சிக்குள் எதிரிகள்
வருமான வரி சோதனைக்கு ஆளான கனகபுரா தாலுகாவில் கௌரம்மா வீட்டிலும் நேற்று பிற்பகலில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இது குறித்து ஊடகங்களிடம் தெரிவித்துள்ள கௌரம்மா, என்னுடைய மகனுக்கு அரசியலில் பல எதிரிகள் உள்ளனர். காங்கிரஸ் கட்சியிலே கூட அவருக்கு பல எதிர்ப்புகள் உள்ளன, ஏனெனில் அரசியல் ஏணியில் அவர் மிக வேகமாக ஏறி வந்தவர். என்னுடைய மகனின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்பட்டு அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளனர்.
சித்து காரணம்
முதல்வர் சித்தராமையா எப்போதுமே என்னுடைய மகனுக்கு எதிராக செயல்படுவார். அவர் தான் இந்த வருமான வரி சோதனைக்கு பின்னும் இருப்பார் என்று எனக்கு தோன்றுகிறது என்று கௌரம்மா கூறியுள்ளார். அமைச்சரின் தாயார் குற்றச்சாட்ட குறித்து பதிலளித்து கர்நாடகா காங்கிரஸ், முதல்வர் சித்தராமையாவிற்கு எதிராக கௌரம்மா ஏன் இப்படி ஒரு கருத்தை கூறுகிறார் என்பது தெரியவில்லை. ஒரு வேளை அவர்களின் மகன் முதல்வர் சித்தராமையா இடையேயான அரசியல் உறவுகளை வைத்து அப்படி கூறினாரா என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.