அழுது புலம்பிய பின்... பத்மபூஷன் விருதுக்கு சாய்னா பெயரைப் பரிந்துரைக்கும் விளையாட்டு அமைச்சகம்!
டெல்லி: பத்ம பூஷன் விருதுக்கு பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலை பரிந்துரை செய்ய விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. பத்மபூஷன் விருதுக்கு சாய்னாவைப் பரிந்துரை செய்யும் கடிதம் கிடைத்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு பத்ம பூஷன் விருது வழங்க வேண்டும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு, இந்திய பேட்மிண்டன் சங்கம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பரிந்துரை செய்தது.
ஆனால் ஒலிம்பிக் போட்டியில் இரண்டு முறை பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு சிறப்பு அந்தஸ்தின் அடிப்படையில், அந்த விருதினை வழங்க விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இதனால், சாய்னா நேவால் கடும் அதிருப்தி அடைந்தார். இது குறித்து அவர் கூறுகையில், ‘ஒருவர் இரண்டாவது முறையாக பத்ம விருது பெற வேண்டுமானால் 5 ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும் என்ற நிலையில் 2011ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வென்ற சுஷில் குமாரின் பெயர் எதன் அடிப்படையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது' என ஊடகங்கள் வாயிலாக கேள்வி எழுப்பினார்.
மேலும், 2010ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வென்ற சாய்னா, பத்ம பூஷன் விருதுக்காக கடந்த ஆண்டு விண்ணப்பித்தபோது, 5 ஆண்டுகள் நிறைவடையவில்லை என்ற காரணத்தைக்கூறி, அடுத்த ஆண்டு விண்ணப்பிக்கும்படி விளையாட்டு அமைச்சகம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் பத்ம பூஷன் விருதுக்கு சாய்னா நேவாலை பரிந்துரைக்கும் கடிதம் சனிக்கிழமைதான் கிடைத்ததாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் விளக்கமளித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘பத்ம பூஷண் விருதுக்கு சாய்னா நேவால் பெயரை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சம் பரிந்துரைக்கவில்லை என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், சாய்னா நேவாலுக்கு விருது வழங்குமாறு, கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய பேட்மிண்டன் சங்கம் அனுப்பியிருந்த பரிந்துரைக் கடிதம் ஜனவரி 3ம் தேதிதான் கிடைத்தது. எனவே, விருதுக்கு சாய்னா நேவாலின் பெயரை உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைப்பது குறித்து ஆலோசிக்கப்படும்' என அவர் தெரிவித்தார்.
மேலும், சாய்னா நேவால் இந்திய விளையாட்டுத்துறைக்கு பெருமை சேர்த்தவர். மேலும் பல வெற்றிகளை அவர் ஈட்ட வேண்டும் என்றும் சர்பானந்தா சோனோவால் கூறினார்.
இவற்றைத் தொடர்ந்து இன்று இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், சாய்னாவின் பெயரை பத்ம பூஷனுக்கு பரிந்துரை செய்ய விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
ஆனால் விருதுகள் தானாக வர வேண்டும். கெஞ்சி வாங்கக் கூடாது என்று சாய்னாவின் வைரியான ஜூவாலா கட்டா டிவிட்டரில் கிண்டலடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.