காவிரி மேலாண்மை வாரியம் கூடாது... டெல்லி கூட்டத்திலும் கர்நாடகா பிடிவாதம்!
டெல்லி : காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் 4 மாநில அரசு அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அதிகாரிகள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பிப்ரவரி 16ம் தேதி இறுதித் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசு 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து காவிரி மோலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை தமிழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதே சமயம் கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டிகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் காவிரி விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக காவிரி நீர் பாசனம் பெறும் மாநிலங்களான தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அரசுகளுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது.
இதன்படி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அலுவலகத்தில் கூட்டமானது நடைபெற்றது. மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் தலைமையில் நடைபெற் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நீர்வளத்துறை செயலர் பிரபாகரன் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கர்நாடகா அரசு சார்பில் தலைமைச் செயலர் ரத்தின பிரபா தலைமையில் அதிகாரிகள் பங்கேற்றனர். புதுச்சேரி மாநில தலைமைச் செயலர் அஸ்வினி குமாரும் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையிலான கூட்டத்திலும் கர்நாடக அதிகாரிகள் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்று குழு அமைக்கவும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
ஆனால் தமிழக அரசு அதிகாரிகள் உச்சநீதிமன்ற தீர்ப்புப் படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை மத்திய அரசு எந்த காரணத்தை கொண்டும் நிராகரிக்கக் கூடாது, ஏற்கனவே 2007லும் காவிரி நடுவர் மன்றமும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டுள்ளதையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் மட்டுமே கர்நாடகாவில் இருந்து மாதம் தோறும் எவ்வளவு காவிரி நீர் திறந்து விட வேண்டும் என்பனவற்றையெல்லாம் வகைப்படுத்த முடியும் என்று வலியுறுத்தினர். எதிர்காலத்தில் தமிழகத்தில் வறட்சி அதிகரிக்கும் நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் மட்டுமே காவிரி நீர் முறையாக தமிழகத்திற்கு கிடைக்கும் என்றும் தமிழக அதிகாரிகள் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.