ஆபாச படம் பார்த்து சிறுமியை சீரழித்த சிறுவர்கள் - அடித்துக்கொன்ற கிராம மக்கள்
ராஜஸ்தானில் ஆபாச படம் பார்த்து எட்டு வயது சிறுமியை மூன்று சிறுவர்கள் சீரழித்துள்ளனர். அவர்களில் ஒரு சிறுவனை கிராம மக்கள் அடித்துக்கொன்றனர். தப்பியோடிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஜெய்ப்பூர்: நாடு முழுவதும் நாள்தோறும் பெண்குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. ராஜஸ்தானில் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து மூன்று இளம் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். திருமணத்திற்கு போன ஒரு சிறுமியை மூன்று சிறுவர்கள் சீரழித்துள்ளனர். சிறுமியின் உறவினர்கள் அவர்களை அடித்ததில் ஒருவன் உயிரிழந்தான். தப்பியோடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
செல்போன், லேப்டாப் போன்ற மின்னணு சாதனங்கள் சிறுவர்களுக்கு எளிதாக கிடைப்பதால் அதில் வரும் தடை செய்யப்பட்ட படங்கள், ஆபாச வீடியோக்கள் மனதில் பல பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கெட்ட எண்ணம் கொண்ட சிறுவர்களின் கைகளில் சிக்கும் பெண்குழந்தைகள் அதிகம் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

பாகேரி குர்த் என்ற கிராமத்தில் சில தினங்களுக்கு முன் நடந்த திருமணத்தில் பங்கேற்க வந்த ஒரு சிறுமியை மூன்று கயவர்கள் தனிமையான இடத்திற்கு அழைத்துக்கொண்டு போய் கூட்டாக வன்கொடுமை செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பி வந்த சிறுமி உறவினர்களிடம் நடந்ததை கூறி அழுதிருக்கிறார். செல்போனில் ஆபாச படங்களை காட்டியதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுமியின் உறவினர்கள், அந்த சிறுவர்களை அடித்து துவைத்தனர். இதில் ஒரு சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டான். மற்ற இரண்டு பேர் தப்பியோடி விட்டனர். காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தப்பியோடிய சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஒரே வாரத்தில் அந்த பகுதியில் 3 பலாத்கார சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் ஒரு நிமிடத்திற்கு 4 சிறுமிகள் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். மூன்று வயது முதல் 70 வயது வரையிலும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் காமுகர்கள் இருக்கின்றனர்.
பிரிட்டன் தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு முதலிடம் அளிக்கப்பட்டிருந்தது.
பெண்களுக்கு எதிராக ஏராளமான குற்ற வழக்குகள் பதிவாகின்றன. பலர் குடும்ப கவுரவம் கருதி வெளியில் சொல்வதில்லை. அப்படியே வெளியே சொன்னாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நீதி கிடைப்பதில்லை என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாகும்.












Click it and Unblock the Notifications