14 வயது சிறுமி சீரழிப்பு: பிறப்புறுப்பில் இருந்து மரத்துண்டு, துணி, பாலித்தீன் பைகள் அகற்றம்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் 14 வயது சிறுமி 2 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். அவரது பிறப்புறுக்குள் மரத்துண்டு, துணி, பாலித்தீன் பைகள் இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்து அகற்றியுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் பதாவ்னைச் சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 23ம் தேதி கடைக்கு சென்றுள்ளார். அப்போது 3 பேர் சேர்ந்து அவரை பைக்கில் கடத்திச் சென்றுள்ளனர். கரும்புத் தோட்டத்தில் வைத்து சிறுமியை 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்து தாக்கினர். இதில் காயம் அடைந்த சிறுமி தோட்டத்தில் கிடந்ததை பார்த்த விவசாயி ஒருவர் அவரை அழைத்துச் சென்று வீட்டில் விட்டுள்ளார்.
மயக்க மருந்து கொடுத்து அவர்கள் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி சிறுமி முதலில் தனது குடும்பத்தாரிடம் தெரிவிக்கவில்லை. பின்னர் லக்னோவில் இருந்து வந்த தனது சகோதரியிடம் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி தெரிவித்தார்.
சம்பவம் நடந்து ஒரு வாரம் கழித்து விவரம் அறிந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.
காரணம் சிறுமியின் பிறப்புறுப்பில் மரத் துண்டு, துணி, பாலித்தீன் பைகள், தீக்குச்சிகள், பாட்டில் மூடிகள் ஆகியவை இருந்தன. அதை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மைனர் உள்பட 2 பேரை கைது செய்துள்ளனர்.
முன்னதாக கடந்த ஆண்டு மே மாதம் 27ம் தேதி பதாவ்னில் சகோதரிகள் இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.